Monday, April 13, 2009

காந்திமதி இசைப்பள்ளி மாணவிகளின் கச்சேரி

வெள்ளிக்கிழமை ஹிந்து நாளிதழில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சியிலெல்லாம் நடந்த இசை நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் படிக்கையில் திருநெல்வேலியில் நல்ல சங்கீதம் கேட்க முடியவில்லையே என்று நினைப்பேன். நேற்று ஞாயிறு தினமலரில் நெல்லை சங்கீத சபா விளம்பரத்தில், சபாவின் இசைப்பள்ளி மாணவிகளின் கச்சேரி என்று பார்த்ததும் நானும் தாமரையும் மாலை சென்றோம்.

இசை ஆசிரியர் மணி பாகவதரின் (85+) விருப்பப்படி செல்விகள் சுப்புலக்ஷ்மி, ஸ்ரீதேவி, விகாசினி மூவரும் இசை மழை பொழிந்தார்கள். பக்க வாத்தியம் வாசிக்க பெண் பாடகிகள் என்றால் பெரிய சபைகளில் வரத் தயங்குவார்களாம். ஆனால் இந்தக் குழந்தைகளுக்காக திரு என்.ரவீந்திரன் - வயலின், ஆல் இந்தியா ரேடியோ வித்வான் திரு.ராமநாதன் - மிருதங்கம், வீரவநல்லூர் திரு.எஸ்.கோதண்டராமன் கடம் வாசித்து உற்சாகப் படுத்தி ஒரு நல்ல கச்சேரி நடத்தினார்கள்."மகா கணபதி", "மருகேலரா, ஓ ராகவா", என்று கீர்த்தனைகளை சேர்ந்து பாடினார்கள். தனித்தனியாகவும் கீர்ததனை பாடினார்கள். "காந்திமதி சங்கர யுவதிம்" எனும் தீக்ஷிதர் கீர்த்தனை முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது. சிறுமிகளால் சிட்டை ஸ்வரம் பாடமுடியாது என்று வயலின் வித்வான் தானே ஸ்வரம் வாசித்து, மிருதங்கம், கடம் இருவரும் தனி வாசித்தது அருமையாக இருந்தது.

சபையின் காரியதரிசி திரு.ஏ.நடேசன் கடம் வாசித்த கோதண்டராமனின் தந்தை அந்நாளில் பிரபலமான திரு வி.வி.சடகோபனின் சிஷ்யன் என்று கூறி, குழந்தைகளை (மூவருக்கும் 12/13 வயது) கெள்ரவிக்க சபையின் அங்கத்தினர்களான திருமதி லோகா, திரு.சுப்பிரமணியன் தம்பதியை அழைத்தார். திருமதி லோகா பேசுகையில் மூவரையும் பாராட்டி சுப்புலக்ஷ்மி, "சம்போ சிவ சம்போ" கீர்த்த்னையை ரொம்ப நன்றாக பாடினார் என்று கூறி குழந்தைகளை ஆசீர்வதித்து சபையின் வெகுமதியான குத்துவிளக்கையும் தான் கொண்டுவந்த பரிசையும் அவர்களுக்கு வழங்கினார்.

திரு சுப்பிரமணியன் வாத்தியக்காரகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன் வி.வி.சடகோபன் தான் நெல்லை ச்ங்கீத ச்பாவின் முதல் கச்சேரி செய்தார் என்ற தகவலையும் சொன்னார்.இந்தச் சிறுமிகள் பாடங்களுடன் பாடல்களையும் ஆர்வத்துடன் படிப்பதை எல்லோரும் பாராட்டி பேசினார்கள்.

பின்னர் துக்கடா பாடி திருப்புகழுடன் நிறைவு செய்தார்கள். என் கேமராவை எடுத்து செல்லாமல்போய்விட்டேன். நல்ல படங்கள் தந்திருப்பேன். இனி எப்போதும் கேமராவுடன் தான் செல்ல வேண்டும்