Wednesday, August 31, 2011

ஆயிரம் பிறை கண்ட பேராசிரியர் சிவ.ராமச்சந்திரன்.

திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரியில் 1950- 70களில் படித்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், இன்று உலகில் எங்கிருந்தாலும் இந்த பெயரைக் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள். எகனாமிக்ஸ் லெக்சரராக தொடங்கி முதல்வராகி ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு.சிவ.ராமச்சந்திரனுக்கு சதாபிஷேகம்



ஆகஸ்ட் 10, புதன்கிழமையன்று அவர் இல்லத்தில்(203, ஐந்தாவது தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி 627 007) சிறப்பாக நடந்தது.



எண்பது வயது நிறைவானவரை ஆசீர்வதிக்கவும், ஆசி பெறவும் கூடியவர்களைப் பார்க்கவே பரவசமானது.





ராமச்சந்திரன் - ராஜலக்ஷ்மி தம்பதியின் மகள் பகவதி, மருமகன் கோபாலகிருஷ்ணன், மகன் கண்ணன், மருமகள் பிரதிமா, பேத்திகள் கோ.பூர்ணிமா, க.அனிக்கா, விழாவை மிக நேர்த்தியாக் ஏற்பாடு செய்திருந்தார்கள்.








வள்ளியூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் நெல்லையில் முதன் முதல் அறிமுகமானது எங்களுக்குத்தான். என் பெரியண்ணன் திரு.முத்துவேல்(அம்மா, அப்பா கூப்பிடுவது குட்டி என்று)1951 - 52 ல், மெட்ராஸ் லொயோலா காலேஜில் பி.எஸ்ஸி படித்தார். ஹாஸ்டலில் நண்பரான ராமச்சந்திரன் பி.ஏ மாணவர்.

திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் தான் அப்போ எல்லாம். லீவில் ஊருக்கு வரும்போது சேர்ந்தே வருவார்கள். அண்ணனுடன் அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து, குளித்து, லஞ்ச் சாப்பிட்டு, மதியம் பயோனியர் பஸ்ஸில் வள்ளியூர் செல்வார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். எங்கள் குடுமபத்தில் ஒருவராகவே ஆனார். அவருடைய கல்யாணத்திற்கு அப்பா, அம்மா நாங்கள் எல்லோரும் மதுரைக்கு சென்றோம். வீட்டு விசேஷம் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார். நல்லது செய்தால் பாராட்டியவர், தவறு செய்தால் கண்டிக்கவும் செய்தார். என் சின்ன அண்ணன் சண்முகம் இந்து கல்லூரியில் அவருடைய மாணவர்.

ஒருநாள் கல்யாண விருந்து முடிந்ததும் என் மாமா, அண்ணன் ராமச்சந்திரனிடம் தாம்பூலத் தட்டை தந்து வெற்றிலை போடு என்றார். வேண்டாம் பழக்கமில்லை என்றார். நீயும் குட்டி மாதிரி தானா என்று கேட்க, குட்டி காபி குடிப்பானே என்றார் ராமச்சந்திரன். அவ்வளவு ஹெல்த் கான்ஷியஸ்.கல்லூரில் என்.சி.சி ஆபீசர். லெப்டினென்ட் ராங்க் எல்லாம் அடைந்தவர்.




படத்தில் என் அண்ணன் திரு.சுப்பிரமணியன். இவருக்கு அடுத்த ஆண்டு சதாபிஷேகம். அருகில் மதினி திருமதி லோகா.





நான் எடுத்த படங்களை ஆல்பம் போட்டு மறுநாள் காலை கொடுத்தேன். எங்கள் கல்யாணத்தில் குட்டி போட்டோ எடுத்தான், சதாபிஷேகத்தில் நீ செய்து விட்டாய் என்றார் அண்ணன் ராமச்சந்திரன். எழுத உட்கார்ந்ததும் மலர்ந்த நினைவுகளால் பதிவிட நாட்களாகி விட்டன.

Wednesday, July 20, 2011

முக்கனி, முப்பால், த்ரீ ரோஸஸ்

1) விரும்பும் மூன்று விஷயங்கள்?
1.முக்கனி,
2.முப்பால் (குறள்)
3.த்ரீ ரோஸஸ் டீ (டிவி விளம்பரங்க. நான் காபி பிரியன்)

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.மூணு சீட்டு ஆடுவது,
2.நான் பிடித்த முயலுக்கு மூணு கால் எனும் பிடிவாதம்
3.டிக்கெட் வாங்க ரெண்டு பேர்தான் கவுண்டரில் நிற்கிறோம்.
மூணாவது ஆள் முந்திச் செல்வது.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
1.மூணாம் உலகப் போர் வந்துவிடுமோ?
2.மரங்களை எல்லாம் வெட்டி வருகிறோம்.இனி காடுகளே இல்லாமல்ஆகிவிடுமோ?
இப்பவே யானை, சிறுத்தை எல்லாம் உணவு தேடி நகருக்குள் வருவதாக
தினம் பேப்பரில் படிக்கிறோம்
3.கார் ஓட்டவே பயமா இருக்கு.
யாருமே (என்னைத் தவிர)சாலை விதிகளை மதிப்பதில்லை.

4) புரியாத மூன்று விஷயங்கள்?
1.நியூட்டனின் மூன்றாம் விதி - நாம் செய்யும் நல்ல ஆக்ஷ்னுக்கு கூட
-ஈக்வல் இல்லை-மூன்று மடங்கு ஆப்போசிட் ரியாக்ஷன் வருவது.
2.மூன்றாம் மாடியிலிருந்து நாம் லிஃப்டில் இறங்கும் போது கதவு
திறந்ததும் நம்மை வெளியே வர விடாமல் நுழைபவர்களுக்கு என்ன அவசரம்?
3./ஒண்ணுமே புரியலே உலகத்திலே/
சந்திரபாபு பாடிய பாட்டுதான் ஞாபகம் வருது.

5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
1.மூணு ரூபாய் சில்லரை காசு
2.ஃபோன் ,
3.லாப் டாப்,

6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?
1.டாம் அண்ட் ஜெர்ரி,
2.பேரக்குழந்தைகள்,
3.வடிவேலு.

7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1.மூணு நாளா யோசிச்சு யோசிச்சு இந்த பதிவு டைப் செய்கிறேன்.
2.டாக்டர் தந்த மூன்று மாத்திரை, மூன்றவேளையும் விழுங்கிக் கொண்டிருக்கிறேன்.
3.வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
அன்னிக்கு ஒருவர் என் கைரேகை பார்த்து, நீங்கள் 96 வயது
வரை இருப்பீர்கள் என்றார்.அடேயப்பா!
இன்னும் 26 வருஷமா? அப்படியானால்:
1.பேத்திகள் கல்யாணம் பார்க்கணும்,
2.கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் விளையாடணும்
3.யாருக்கும் தொந்திரவு கொடுக்காமல்
என் வேலைகளை நானே பார்த்துக்கொண்டு,
இரவில் படுத்தார், காலையில் எழுந்திருக்கலை
என்று சொல்லுமாறு போய்விட வேண்டும்

9) செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
1.ஒண்ணு இல்லை 2.ரெண்டும் இல்லை 3.மூணும் இல்லை

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1.பொது இடங்களில் அசிங்கமாக செல் போனில் பேசுவது.
2.பொய் சொல்லுவது
3.நம்மை இந்திரன், சந்திரன், (எந்திரன் - மூணாவதாக சேர்த்துக்கலாமா?)
என்று புகழ்வது. என் திறன் எனக்குத் தெரியாதா.

11) கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?
1.தபேலா வாசிக்க.
2.ப்ளேன் ஓட்ட
3.டைப் அடிக்க.

அந்நாளில் எங்க ஊரில் ரிப்போர்ட்டர்ஸ் ஹோம் தான்
பெரிய டைப் இன்ஸ்டிட்டியூட்.. அதில் சேர்ந்து asdfgf ;lkjhj
என்ற முதல் பாடம் மட்டும் படித்தேன்

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
1.காலை டிபன் ஹோட்டலில் என்றால் பொங்கல், வடை
2.மதியம் வீட்டில் சொதி.
3.இரவில் இட்லி

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
1.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது...
2.மூன்று தமிழ் தோன்றியது...( படம்-பிள்ளையோ பிள்ளை )
3.கூகுளில் தேடினேன் மூணாவது பாட்டு கிடைக்கவில்லை.)

14) பிடித்த மூன்று படங்கள்?
1.மூன்று முகம 2.மூன்றாம் பிறை 3.மூன்று முடிச்சு.
இது மூன்றுக்காக சொன்னது. பிடித்த 3 படங்கள்:
சந்திரலேகா, மலைக்கள்ளன், பராசக்தி

15)இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்? 1.கம்ப்யூட்டர் 2.செல்போன் 3.ப்ளாக்(blog)

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
அந்த மூவர், என் பதிவுகளுக்கு தவறாமல் பின்னூட்டம் இடும்
1.நானானி 2.கோமா 3. ராமலக்ஷ்மி

Thursday, June 30, 2011

மதி தா என்று நான் கேட்ட ம.தி.தா பள்ளிக்கு 150 வயது


திருநெல்வேலி ஜங்ஷனில் அமைந்த துரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளி(ம.தி.தா இந்து......)யின் 150வது ஆண்டுவிழாவின் முதல் நிகழ்ச்சி நன்கொடையாளர் தினம்.






அந்நாளில் ரூ. 1,00,000 வழங்கிய வள்ளல்களை நினைவு கூறும் வகையில் பள்ளியின் கல்விச் சங்கம் இன்று 30/06/2011 கொண்டாடியது.

நெல்லை மாநகராட்சி மேயர் திரு,ஏ.எல்.சுப்பிரமணியன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். கல்விச் சங்க்த்தின் தலைவர் திரு.எஸ்.மீனாட்சிசுந்தரம் தலைமை உரையில் திருநெல்வேலியில் ம.தி.தா, புனித சேவியர், புனித யோவான் பள்ளிகள்தான் அந்நாளில் பிரபலம். அதில் ம.தி.தா முதலில் தோன்றியது என்றார்.
கல்விச் சங்கத்தின் செயலாளராக 15 ஆண்டுகள் பணியாற்றிய திரு.அம்மையப்ப முதலியாரின் திரு உருவப் படத்தை கல்விச் சங்கத்தின் நன்கொடையாளர் வழிவழி உறுப்பினர் திரு.T.சந்தீஷ் திறந்து வைத்தார்.



சிறப்பு விருந்தினர் திருமதி உஷாராமன் - முதல்வர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கர்நகர்)தன் உரையில் மகாகவி பாரதி, வ.உ.சி, போன்ற கவியும் சுதந்திரப் போராட்ட வீரரும் பயின்ற பள்ளியின் ஆண்டுவிழாவில் தம்மை பேச அழைத்ததை பெருமையாக் கருதுவதாகக் கூறி மாணவ மாணவியருக்கு அந்த தலைவர்கள் போல வாழ வேன்டும் என்று அறிவுரை கூறினார்.

கல்விச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் திரு.தளவாய்.தி.ராமசாமி நன்றி கூறினார். வெள்ளி (01/07), சனி(02/07) இருநாளும் முனைவர்.கு.ஞானசம்பந்தன் நடுவராக பட்டிமன்றம் - சின்னதிரையும் வெள்ளித்திரையும் மக்களை பண்படுத்துகிறதா? பாழ் படுத்துகிறதா? -என்ற தலைப்பில் பட்டிமன்றம் உட்பட சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பள்ளியின் பழைய மாணவனாக நானும் கலந்து கொண்டு நினைவுகளில் மூழ்கி எழுந்து வந்தேன். நினைவுகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்

Wednesday, May 25, 2011

திருநெல்வேலியில் பதிவர் சந்திப்பு

பதிவர் சந்திப்பு-அழைப்பு‏

அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!

வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம், மதுரை ரோடு,திருநெல்வேலி சந்திப்பு.

நாள்: 17.06.2011 - நேரம்: காலை 10.00 மணி

10.06.2011குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம்.

எனது unavuulagam@gmail.com mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.என் செல் எண் 9442201331.ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும்.

அவரவர் வலைப்பூவில், அழைப்பிதழை மலர செய்யுங்கள்.

பி.கு: ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.


மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்.
உணவுஉலகம்
FOOD SAFETY

நெல்லை பதிவர்கள் எல்லோரும் வந்து கருத்து பரிமாற்றம் செய்ய நல்ல சந்தர்ப்பம். அமைப்பாளர்கள் சார்பில் நானும் வரவேற்கிறேன்.
சகாதேவன்

Sunday, April 10, 2011

ஹஸாரே -இந்த பேரை முன்னே கேட்ட மாதிரி இருக்கே

யோசித்துப் பார்த்தால் - முந்நாள் கேப்டன் விஜய் ஹஸாரே; வினு மன்காட்; நாரி கண்ட்ராக்டர் என்று கிரிக்கெட்டர்கள் பெயர் எல்லாம் ஞாபகம் வந்தது. அப்போ எல்லாம் டெஸ்ட் மாட்ச் தான். ஒன் டே மாட்ச் இல்லை. ட்வென்டி/ட்வென்டி வரலை. டிவி கிடையாது. ரேடியோவில் தான் கிரிக்கெட் கமென்டரி மக்கள் கேட்பார்கள். மறுநாள் பேப்பரில் பார்த்தார்கள்.

இன்று போல் அவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கவில்லை. பரிசு மழையும் பெய்யவில்லை. ஒருவேளை அந்த ஹஸாரேதான் தங்களுக்கும் ஹன்டே வெர்னா கார்கள்; பாரத் ரத்னா விருதுகளும் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரோ என்று நினைத்தேன்.

மகாத்மா காந்தி போல அன்னா ஹஸாரே அவர்களின் அஹிம்சை போராட்டம் எவ்வளவு உயர்ந்தது. ஊழல் இல்லாத அரசு நாடு முழுதும் அமைய ஜன் லோக்பால் அமைப்பு முழு வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திப்போம்

Sunday, April 3, 2011

சத்யராஜின் அடுத்த வேஷம் என்ன?

மும்தாஜ் :- ஜெஹாம்பனா .பாண்டிய மன்னனைத் தொடர்ந்து பல்லவனும் சேரனும் தங்கள் நாட்டில் தொடங்கி விட்டார்கள். நாம் என்ன அவர்களுக்கு சளைத்தவர்களா? நீங்களும் உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

ஷாஜஹான்:- என்ன பேகம் சொல்கிறாய். எந்த நாட்டின் மீது படை எடுக்க வேண்டும்? சொல்.

மும்தாஜ்:- படை இல்லை ஜெஹாம்பனா. உடை. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் போல பட்டு சேலை உடுத்த வேண்டும் சுடிதார் அணிய வேண்டும் என்று ஆசை. ஔரங்கசீப்க்கும் விதம் விதமான பேண்ட் ஜீன்ஸ் எல்லாம் வேண்டுமாம்.

ஷாஜஹான்:- சரி நாம் எந்த கடைக்கு போகணும்?

மும்தாஜ்:- உங்களுக்கு ராஜாங்க வேலையே நாள் முழுதும் சரியாகி விடுகிறது. பேப்பர் படிப்பதில்லை. டிவி பார்ப்பதில்லை. உங்களுக்கு ஜி.கே ஸீரோதான்.

ஷாஜஹான்:- மந்திரியாரே ராணி என்ன சொல்கிறார்? உங்களுக்கு புரிகிறதா?

மும்தாஜ்:- நானே சொல்கிறேன் ஜெஹாம்பனா. நீங்கள் எனக்கு தாஜ் மஹால் ஒன்றும் கட்ட வேண்டாம். நம் நாட்டு மக்களுக்கு அழகான ஜவுளிகளின் ஆலயம் கட்டுங்கள். புரியலையா?போத்தீஸ்.

ஷாஜஹான்:- ஓ அதுவா? நானும் கேள்விப்பட்டேன். மந்திரியாரே உடனே தூதர்களை தமிழ்நாடு அனுப்பி போத்தீஸை அழைத்து வரச் சொல்லுங்கள்.

புனேயில் சிவாஜி/ ஹைதராபாத் நிஜாம்/ மைசூர் மகராஜா அரண்மனைகளில் என்ன நடக்கும் என்று சொல்லுங்களேன்.

Friday, March 11, 2011

பெயர் காரணம்

என் பெயருக்கு என்ன காரணம் தெரியாது. அப்பா அம்மா இட்ட பெயர் - நான் வடிவேல் முருகன் தான். வெடிவால் என்று என் தமிழாசிரியர் அழைத்த பெயர். காரணம் என் முதல் பதிவிலேயே சொன்னேன். தொடர் பதிவில் எழுதும் அளவு ஏதுமில்லை.

சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் இருவருக்கும் அந்தப் பெயர் வந்த காரணம் எல்லோருக்கும் தெரியும். அதுபோல வெண்ணிற ஆடை மூர்த்தி வெண்னிற ஆடை நிர்மலா பெயர் காரணமும் தெரியும்.
இவர்கள் பெயரின் காரணம் என்ன சொல்லுங்களேன்.

காத்தாடி ராமமூர்த்தி

கல்லாப்பெட்டி சிங்காரம்

கள்ளபார்ட் நடராஜன்

ஒருவிரல் கிருஷ்ணாராவ்

நிழல்கள் ரவி

ஜெயம் ரவி

ஜாவர் சீதாராமன்

காக்கா ராதாகிருஷ்ணன்

க்ரேஸி மோகன்

டெல்லி கணேஷ்

டெல்லி குமார்

Wednesday, February 16, 2011

மெய் மறந்தேன் ராஜா

வினாடிகள் மட்டும் ஓடும் டிவி விளம்பரங்கள் சில நம்மை மெய் மறக்க வைக்கின்றன.
ஜுவல்லரி விளம்பரத்தில் அந்த பெண் கோவிலில் பாடிக்கொண்டிருக்கிறாள். அழகாக கம்பீரமாக நடந்து வரும் இளையராஜா -மெய் மறந்தேன் கண்ணா- என்று முடிப்பார். தன்னை வணங்கும் அப்பெண்ணை ஆசீர்வதித்து ஆட்டோகிராப் போடுகிறார். நிஜமாக நான் மெய் மறந்தேன். இந்த வார குமுதத்தில் டைரக்டர் கிருஷ்ணா ராஜா தன்னிடம் எனக்கு எதற்கு மேக்கப். கறுப்பு போதாதா என்றும் கேமரா கோணங்கள் பற்றியும் கேட்டாராம். பாட்டும் ராஜாதான் எழுதினாராம். ஒளிப்பதிவு P.C.Sriram.

.

வீட்டு மொட்டை மாடியில் ஆவலுடன் காத்திருக்கும் சிறுமி கார் வருவதைப் பார்த்து இறங்கி ஓடி வருகிறாள். புதிய நானோவைப் பார்த்ததும் அவள் பிரமிப்பதும் தங்கள் காரை எல்லோரும் பார்க்கிறார்களே என்று தன் கண்ணில் இருந்து கண்மை எடுத்து காருக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கிறாள். அருமையான நடிப்பு.
அப்போ எனக்கு எட்டு வயது. எங்கள் வீட்டுக்கு புது கார் இன்று டிவிஎஸ்ஸிலிருந்து வரும் என்று அப்பா சொன்னார். அந்த கார் வரும் வரை நான் வாசலில் காத்திருந்த நினைவுதான் வந்தது.

Friday, January 28, 2011

ஹே ராம்




ஜவஹர்லால் நேரு பிர்லா ஹவுஸ் வெளியே கூடியிருக்கும் மக்களுக்கு மஹாத்மா காந்தி மறைந்து விட்டார் என்று என்பதை அறிவிக்கிறார். கார்டியர் ப்ரெஸ்ஸன் என்ற புகைப்படக்காரர் இரவில் ஃப்ளாஷ் இல்லாமல் விளக்குகளின் வெளிச்சத்திலேயே எடுத்த படம்.

Thursday, January 13, 2011

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்...

கோகிலவாணி என்று ஒரு படம் வந்தது தெரியுமா? ஜி.ராமநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜனும் ஜிக்கியும் பாடிய அருமையான, மறக்க முடியாத பாடல்கள். வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் (மந்திரிகுமாரி)தயாரித்தது. தாம்பரம் லலிதா, ரகுவீர் ஜோடியாக நடித்தது. ஏனோ படம் நன்றாக ஓடவில்லை.
திரைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் டிவியில் கூட பார்க்க முடியவில்லை.

சீர்காழி பாடும் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.

சரச மோகன சங்கீதாம்ருத சாரலில்
மாங்குயில் கூவுது பார்
சுவையில் தேனிசை கேட்பவர் யாவரும்
சித்திரம் ஆகும் விசித்திரம் பார்

சரச மோகன......

சந்தையிலே விற்கும் பொருளல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவ லயம்
சுந்தர வான்கவி சுகக்குரலில் எழும்
சுதந்திர நாதமே சங்கீதம்

சரச மோகன...

மந்தை மேகங்கள் மாமழை பொழியும்
விந்தையாய் மயில் வளைந்தசைந்தாடும்
மந்த மாருதம் மலரிசை பாடும்
அந்த கீதமே அமர சங்கீதம்

சரச மோகன.....


ஜிக்கியின் ஹம்மிங்குடன் சீர்காழி பாடும்
"திருவே என் தேவியே வாராய், தேனார் மொழி,
மானார் விழி என்னைப் பாராய்"
,
ஜிக்கி பாடும்
"அழகோடையில் நீந்தும் இள அன்னம்,
உமதெண்ணம்",

என இனிமையான பாடல்கள் எஸ்.டி.சுந்தரம் எழுதியது.

பாலஸ்-டி-வேல்ஸ் தியேட்டரில்தான் படம் ஓடியது. நெல்லையில் மூடப்பட்ட சில தியேட்டர்களில் ஒன்று(எங்களுடையதுதான்). பாட்டு சீன்கள் நேரத்தில் போய் பலமுறை பார்த்தேன். நானானிக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
டிஸ்க் கிடைத்தால் வாங்கி கேட்டுப் பாருங்கள்.