Sunday, December 1, 2013

நான் சந்தித்த சினிமா பிரபலங்கள்

ஒருமுறை அப்பாவுடன் நானும் மதுரை சென்றபோது(1968ல்) டி.வி.எஸ் விருந்தினர் மாளிகையில் தங்கி, காலையில் புறப்படுமுன், அங்கு தங்கியிருந்த  சிவாஜி கணேசனுக்கு அப்பாவை அறிமுகம் செய்தார்
 கெஸ்ட் ஹவுஸ் மானேஜர்.
  தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை அணைத்து விட்டு,தண்ணீர் எடுத்து வாய், கையெல்லாம் சுத்தம் செய்து,  அப்பா அருகில் வந்து வணங்கி, சில நிமிடங்கள் பேசினார்.

என் மகள் ராமலக்ஷ்மிக்கு (1975/76)திருப்பதியில் முடி எடுத்துவிட்டு காரில் மெட்ராஸ் வந்தோம். நுங்கம்பாக்கம் சாலையில் எதிரில் வந்த ஜெயசங்கர் என் மகளைப்பார்த்து காரை ஸ்லோ பண்ணி, "எந்த ஊர் மொட்டை , திருப்பதியா? என்று கேட்டுவிட்டு விரைந்து சென்றார்.

நான் டி.வி.எஸ்ஸில்  பயிற்சியாளனாக சேர்ந்து படிப்படியாக டெபுடி ஒர்க்ஸ் மானேஜராகி,  சில வருஷத்தில் விலகினேன்.
 மதுரையில் ஒரு நாள் செவர்லே காரில் சாண்டோ சின்னப்ப தேவர், தன் குழுவுடன் வந்தார். காரில் சின்ன வேலை தான். அவரை விசிட்டர் அறையில் அமரச் செய்து, இரண்டு மெக்கானிக்கிடம் சொல்லி விரைவில் முடித்து, ஓட்டிப் பார்த்து விட்டு  அவரிடம் வந்து உங்கள் கார் ரெடி என்றேன். அதுக்குள்ளாகவா? தம்பி உன் பேர் என்ன என்றவரிடம் , 'வடிவேல் முருகன்'னு சொன்னதும் "முருகா முருகா" என்று என்னைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னார் அந்த முருக பக்தர்.

திருச்சிகிளையில் பார்ட்ஸ் பிரிவில் கணேசன்னு ஒரு புதுக்கோட்டைக்காரர் இருந்தார். ஜெமினி கணேசனும் புதுக்கோட்டைதானே. இருவரும் சொந்தக்காரர்கள்கூட..  திருச்சி வந்த ஜெமினி, புதுக்கோட்டை கணேசனைப் பார்க்க டி.வி.எஸ் வந்தார். கணேசன் உடனே என்னை அழைத்து ஜெமினிக்கு அறிமுகம் செய்தார். ஒளவையாரிலிருந்து எனக்குப் பிடித்த அவர் படங்களை சொன்னேன்.

 திருநெல்வேலி டி.வி.எஸ்ஸில் ஒருநாள், டெல்லி கணேஷ், தன் நண்பர் கோபாலகிருஷ்ணனைப் பார்க்க வந்தார். இருவருக்கும் அருகில் உள்ள முறப்பநாடுதான் சொந்த ஊர்.

குமுதத்தில், அரசு ஒரு கேள்விக்கு பதில் சொன்னார், முந்தாநாள் நடிகைகள், நேற்றைய நடிகைகள், இன்றைய நடிகைகளில் தனக்கு யாரைப் பிடிக்கும் என்று.
 விஜய் டிவியின் 'ஆபீஸ் சீரியலில் வரும் லக்ஷ்மியின் தங்கை, தன் மகளின் வகுப்பு தோழியாம். சீக்கிரம் லக்ஷ்மியை பேட்டி கண்டு உங்கள் காதில் புகை வருமாறு எழுதுவேன் என்று வலைப்பூவில் ஒரு பதிவர் எழுதினார். இரண்டையும் நான் ரசித்தேன்.

சந்தித்த நடிகர்கள் பற்றி சொல்லிவிட்டேன். ஆனால் உங்கள் காதில் புகை வரும்படி எழுத,  முந்தாநாள், நேற்றைய, இன்றைய நடிகை யாரையும் நான் இன்னும் சந்திக்கவில்லை