Thursday, December 11, 2014

நேற்று பாரதியார் பிறந்தநாள் என்றதும் அவர் படித்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலை பள்ளிக்கு சென்றேன். கள்ளிபட்டி(தேனி மாவட்டம்) நல்லாசிரியர் திரு.சு.குப்புசாமி சிறப்பு விருந்தினர், பள்ளியின் கல்வி சங்க் செயலாளர் திரு.மு.செல்லையா, திரு.கணேசன்(தேனி)தலைமை ஆசிரியர் திரு.சுப்பையா பங்கேற்க, விழா நிகழ்ச்சிகளை ஒரு மாணவன் அழகாக தொகுத்து வழங்கினா(ர்)ன்.
திரு.கணேசன் பாரதியாரைப் பற்றி ஒரு கவிதையுடன் பேசினார். சிறப்பு விருந்தினர் திரு.குப்புசாமி பேசும்போது சொன்ன தகவல்கள்:
சீவலப்பேரியில் வாழ்ந்த சின்னசாமி ஐயர், எட்டயபுரத்திற்கு குடிபெயர்ந்து, ராஜா அரண்மனையில் பணியில் சேர்ந்தார். 1882ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று மகன் சுப்பிரமணியம் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலை பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படித்தார் சுப்பிரமணியம்.
1893ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு தமிழ்ப் புலவர் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி, அதில் கலந்துகொண்ட சுப்பிரமணியத்தை  பாராட்டி பாரதி என்று அழைத்தார். அன்றிலிருந்து சுப்பிரமணிய பாரதி என அழைக்கப் பட்டார்.
சின்ன வயதில் அவர் பெற்ற புகழைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதிநாதன் என்பவர், பாரதியிடம், தம்பி உன்னால் "பாரதி சின்னப் பயல்" என்று பாட முடியுமான்னு கேட்டார்.
பாரதி சொன்ன கவிதை:
  "காரது போல் நெஞ்சிருண்ட
   காந்திமதிநாதனைப்
   பார் அதி சின்னப் பயல்"
தன்னை சின்னப்பயல் என்று சொன்ன எதிரியை "அதி சின்னப் பயல்" என்று பாடிவிட்டார்.
1897ல் பாரதிக்கு செல்லம்மாளுடன், நான்கு நாள் விழாவாக கல்யாணம் நடந்ததாம்.. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், பின், சுதேசமித்திரன் பத்திரிகை உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்தாராம்.

ஒரு நாள் பத்திரிகை ஆபீசிலிருந்து வீடு செல்லும்போது, அன்று வாங்கிய சம்பள பணத்தை அப்படியே தான் வந்த குதிரை வண்டிக்காரனின் மனைவி குழந்தைகளின் வைத்திய செலவுக்காக தந்துவிட்டாராம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானைக்கு தேங்காய், பழம் உண்ணத் தருவாராம். ஒரு நாள் அவரை, யானை கிட்ட போகாதே, அதற்கு மதம் பிடித்து விட்டது என்று தடுத்தும், "அது நான் வணங்கும் பராசக்தி,என்னை ஒன்றும் செய்யாது" என்று  யானை அருகில் போனார். யானையோ அவரைத் தும்பிக்கையால் தூக்கி வீசிவிட்டது.
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சில நாள் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு வந்தார். ஆனாலும் அன்றிலிருந்து மிகவும் பலவீனமானார்.
 "காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
   காலருகே வாடா, சற்றே உதைக்கிறேன்"
 என்று பாடிய மகாகவி 1921 செப்டம்பர் 12 அன்று மறைந்தார்.

Friday, November 21, 2014

KIDDIVAL

RmKVயின் கிட்டிவல் தொடங்கி 25 அருஷம் ஆச்சு. போன சனிக்கிழமை
 சாரா டக்கர் காலேஜில் நடந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து 80 பள்ளிகளின் 1500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகமாக தங்கள் திறமையை காட்டினார்கள்.
பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி (75 மார்க்)முதல் பரிசையும்,ஜெயேந்திரா கோல்டன் ஜூபிலி (65) இரண்டாம் பரிசையும், பாரத் வித்யாலயா CBSE (50) மூன்றாம் பரிசையும் பெற்றது.
இந்த ஆண்டின் புதிய போட்டி - SPELLING BEE
மேலை நாடுகளில் இந்த விளையாட்டில் இந்திய வம்சாவளி குழந்தைகள்தான் அதிகம் ஜெயிக்கிறார்கள். பிள்ளைகள் டாண் டாண்னு சொன்னார்கள்.
போட்டியில் ஸ்பெல்லிங் கேட்ட சில வார்த்தைகள் -
 SIGNIFICANCE ; ETIQUETTE ; COMMITTEE ; RESTAURANT ; CALENDAR

JUMBLE WORDS-  TOPMREUC ; AGHRMRUBE ; LESENKTO
E T I Q U E T T E

TOPMREUC ---COMPUTER
FANCY DRESS
"கனவு காணுங்கள்"

 
Vivekanadar as statue
   

Monday, July 21, 2014

 இன்றும்  ஒரு சதாபிஷேகம்.

முந்தாநாள், சனிக்கிழமையன்று நண்பர் என்னைப்பார்க்க வரேன் என்று போன் பண்ணினார். ஒரு சதாபிஷேக நிகழ்ச்சி.பிறகு பார்க்கலாம் என்றேன். திங்களன்று மீண்டும் கூப்பிட்டு, இன்னிக்கு வரலாமான்னு கேட்டார். இன்றும் ஒரு சதாபிஷேகம். மேலச்செவலுக்கு போகிறேன்
. அன்று என் மாமாவுக்கு. இன்னிக்கு என் அத்தானுக்கு.

மேலச்செவல் பண்ணையார் வீட்டைப்பற்றி THE HINDU நாளிதழில் சில மாதங்கள் முன் படித்திருப்பீர்கள். அவர் வீட்டிலேயே நடந்த சுப நிகழ்ச்சிக்கு ஊரே திரண்டு வந்தது. சொந்தங்கள் நாங்கள் மீண்டும் கூடினோம்.

மகன் சுரேஷ், மருமகள் சித்ரா

எஸ்.கல்யாணி,சண்முகம்(பேபி), பத்மா
,முத்துலக்ஷ்மி, பிச்சம்மாள்,முனைவர்.ரமாபிரபா, ஆர்.கல்யாணி
Family Chart
கெட்டி மேளம், கெட்டி மேளம்


மாங்கல்யம் தந்தது நானேநா............
 
                            வாழ்க வளமுடன்
முந்தாநாள் சதாபிஷேகம் கண்ட கோமதிநாயகம் தம்பதி
ராதா,  ரமணி,  பத்மா, வடிவேல்முருகன்,  கல்யாணி, சங்கர்,   லக்ஷ்மனன், செல்விலோகா  ,பொன்னம்மாள்,  தாயுமான ராமலிங்கம்,  சுப்பிரமணியன்

.

.

                                                                                                               








Saturday, July 19, 2014

சதாபிஷேகம்.

ஆயிரம் பிறை கண்ட எங்கள் மாமா, கோமதிநாயகம் அவர்களின் சதாபிஷேகம் இன்று நடந்தது.
அமெரிக்காவில் இருந்து வந்த  அவரது இரண்டு மகள், மகன், பேரன் பேத்திகளுடன்
உறவினர்கள், உற்றார், நண்பர்கள் என ஆசி பெற
எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடியிருக்க,


 

 

 

 
 






 
கோமதிநாயகம்,சூர்யகுமாரி தம்பதிகளை ஆசீர்வதிக்க  பெரியவர்களும் வர,  விமரிசையாக நடந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thursday, June 26, 2014

ராதா ஜெயலக்ஷ்மி
  பெயர்கள் ஞாபகம் இருக்கா? 'காஞ்சனா' -கே.ஆர்.ராமசாமி, லலிதா பத்மினி நடித்த பக்ஷிராஜா பிலிம் தயாரிப்பு.1954னு நினைக்கிறேன். அதில் ஒரு கல்யாண கச்செரி சீனில் ராதா ஜெயலக்ஷ்மி பாடுவார்கள்."சலமேலரா சாகேதராமா" கீர்த்தனை. அதன் பிறகு இன்று வரை யாரும் அந்த கிருதியை பாடி நான் கேட்டதில்லை. அன்றிலிருந்து நான் அவர்கள் ரசிகன். இருவரும் கஸின்ஸ்

 .பக்தி பாடல்கள் . ஹெச்.எம்.வி, கொலம்பியா ரிகார்டுகளில் நிறைய பாடியிருக்கிறார்கள். பிறகுதான் சபாக்களில் கச்செரி செய்ய தொடங்கி பிரபலமானார்கள்.
ஜி.என்.பி பாணியிலேயே பாடியதால், வயலினிஸ்ட் மைசூர் டி.செளடையா,
"G.N.B IN SAREES" என்று பாராட்டுவாராம். 1981ல் சங்கீத் நாடக அகாடமி அவார்ட் பெற்றார்கள்.
  சினிமாவிலும் பின்னணி நிறைய பாடினார் ஜெயலக்ஷ்மி. டைட்டிலில் ராதா ஜெயலக்ஷ்மி என்றே வரும்.

 மாங்கல்யம்  (ஒட்டும் இரு உள்ளங்கள.)
 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி  (வெண்னிலாவும் வானும்..)
மோட்டார் சுந்தரம் பிள்ளை   (மனமே முருகனின் மயில் வாகனம்..)
மனோகரா  (சிங்கார பைங்கிளியே பேசு)
இன்னும் பல இனிய பாடல்கள்.

1990க்கு பிறகு இசை ரசிகர்களும் சபாக்களும் இவர்களை மறந்து  விட்டார்களோ என்னவோ. சென்ற மாதம் ஜெயலக்ஷ்மி அவர்கள் மறைந்த செய்தி சென்னை ஹிந்து இதழில் பார்த்தேன். மற்ற நாளிதழ்களிலோ, டிவியிலோ வந்த மாதிரி தெரியவில்லை. ராதா ஜெயலக்ஷ்மி பாடிய "பண்டு ரீதி கோலு" என்ற தியாகராஜர் கிர்த்தனை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.
                  http://www.youtu.be/a25osFeLkgM

Thursday, May 8, 2014

உயிரை காப்பாற்றிய லயன் பஸ்

புதன்கிழமை காலை என் அண்ணி ஆஸ்பத்திரியில் இருக்கிறார்ன்னு தெரிந்ததும் பார்க்கப் போனேன். "ஒன்றுமில்லை சித்தப்பா, அம்மா சுவாசிக்க சிரமப்பட்டதால் வந்தோம் என்றான் ரமணி. எங்களை யார் என்று விசாரித்த டாக்டர் பாலாஜியிடம் லயன் கம்பெனி என்றதும், ற்ட்ன்.வடிவேல்முருகன் உங்களுக்கு என்ன வேன்டும் என்று கேட்டார். திருநெல்வேலி மெடிக்கல் காலேஜில் படிக்கும் போது உங்கள்  க்விஸ் நிகழ்ச்சி பற்றி சொன்னார். இப்போ டாக்டர் வருவார், என்ன சொல்கிறார் பாருங்கள் என்றான்,

 சிறிது நேரத்தில் வந்த டாக்டர் பாலாஜி, என்னைப் பார்த்ததுமே சார் வாங்க,

"என் உயிரை காப்பாற்றியதே லயன் பஸ்தான் " என்றார்.
 
அவரது சொந்த ஊர் எட்டயபுரம். 1974ல், தான் சின்னக்குழந்தையாக (1 1/2 வயது) இருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் திடீரென்று உடல் சரியில்லாமல் போனதால் கோவில்பட்டி ஹாஸ்பிடல் போக வேறு வண்டி எதுவும் கிடைக்காமல் பஸ் ஸ்டாண்டில் ஹால்ட் ஆகி நின்ற எங்கள் லயன் பஸ் டிரைவரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆபீஸ் அனுமதியில்லாமல் என்ன செய்ய என்று யோசித்த டிரைவர் சமயோசிதமாக அருகில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திருநெல்வேலி ஆபீஸுக்கு ட்ரங்க் காலில் கேட்டு அனுமதி வாங்கினாராம் - டிரைவரும் ட்யூட்டியில் இருந்த போலீஸ்காரர்களும் பாராட்டுக்குரியவர்கள் -

உடனே பேற்றோருடன் குழந்தை பாலாஜியை கோவில்பட்டி கொண்டு சேர்த்துவிட்டு எட்டயபுரம் திரும்பினார்.

 முதலுதவிக்குப் பிறகு மறுநாள் காலை பாலாஜியை மதுரை ஹாஸ்பிடல் கூட்டிப் போனார்களாம்.

அந்த பஸ்ஸை போட்டோ எடுத்து இன்றும் தங்கள் வீட்டில் வைத்திருக்கிறார்களாம்

Thursday, May 1, 2014

"ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே.........."



1950களில்   GRUNDIG,  PHILLIPS  ஸ்பூல் டேப் ரிகார்டர்கள் பிரபலமாக தொடங்கியது. டாக்டர் ஆர்.சுப்பிரமணியமும் என் அண்ணன் முத்துவேலும் நெல்லை சங்கீத சபா கச்சேரிகளை ரிகார்ட் செய்து கேட்டு மகிழ்வார்கள். அப்போ எல்லாம் பாடுபவர்களும் அனுமதித்தார்கள். அண்ணனின் நண்பர் கிருஷ்ணனின் கல்யாணத்தில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரியில் கச்சேரி. அண்ணன் அதை டேப்பில் பதிவு செய்து வந்தார்.

அதில் நான் கேட்டு ரசித்த பாட்டுதான், 
"பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரெங்கநாதா......". ராஜாதேசிங்கு படத்தில் எம்.எல்.வி பாடியது.   கீர்த்தனை எல்லாம் பாடியதும் துக்கடாவில்தான் தமிழ் பாட்டுகளுடன் சினிமாவில் தாங்கள் பாடிய பாட்டு உட்பட பாடுவார்கள். அன்று இந்த பாட்டை ராகமாலிகையிலேயே பாடினாரோ என்னவோ. நாட்டிய பேரொளி பத்மினி படத்தில் பாடி ஆடுவார்.
அதில் சில  வரிகள்:
"எங்கிருக்கிறான்? ஹரி எங்கிருக்கிறான்.." என்று ஹிரண்யன் கேட்க, "எங்குமிருப்பான். தூணில் இங்குமிருப்பான் என்று மகன் பிரகலாதன் சொல்ல, நரசிம்மமாகவே தோன்றி பத்மினி ஆடுவார் பாருங்கள்.

ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே அர்த்தசாம நேரத்திலே அவதரித்தோனே..ஆயர்பாடி மேவிய யசோதை நந்தபாலா..."என்று கிருஷ்ணன் அவதரிக்க, கோபியரும் சேர்ந்துகொள்ள அருமையான நடனம். நடன அமைப்பு யார் என்று நினைவில்லை.

பத்து அவதாரங்களையும் சொல்லும் பாடலின் சந்தங்களை பல ராகங்களில் அமைத்திருப்பார் இசைமேதை ஜி.ராமநாதன். பாட்டைக் கேட்டு என்னென்ன ராகங்கள் என்று யாராவது கமெண்டுங்களேன்.




நாளை ஜி.ஆர். எம்.எல்.வி, பத்மினி மூவரின் இன்னொரு திருவிளையாடல்  பாட்டு பற்றி எழுதுகிறேன்

Monday, January 27, 2014

OLD BOYS !!!



தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர் மன்ற குடும்ப விழா- 2014 வழக்கம் போல குடியரசு தினத்தன்று மாலை 5.00 மணிக்கு, கல்லூரியின் நூலக முற்றத்தில் நடந்தது.
மன்றத்தின் தலைவர் திரு.அழகியநம்பி தலைமையில், கல்லூரி முதல்வர் Rev.கில்பர்ட் கமில்லஸ், இயக்குனர் Rev.Dr.ஆரோக்கியசாமி, செயலர்.Rev.ஜேஸு மைக்கேல்தாஸ் ஆகியோரின் முன்னிலையில், மன்றத்தின் செயலர் திரு.ஜி.முத்துகிருஷ்ணன் அவையோரை வரவேற்க விழா தொடங்கியது.






சிறப்பு விருந்தினர்களாக, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி தாளாளர்
 திரு.A. P. C V.சொக்கலிங்கமும்
 பாளை தூய யோவான் கல்லூரி தாளாளர் திரு.குணசிங் செல்லதுரையும் வந்தார்கள்.
திரு.சொக்கலிங்கம் தன் உரையில், தான் தூத்துக்குடி கால்ட்வெல் பள்ளியில் படித்த காலம் தொடங்கி, கால்ட்வெல் கிறிஸ்துவ மதப் பிரசாரத்திற்காக இந்தியா வந்தவர், தமிழை கற்றுக் கொண்டதையும், கல்விக்காக பள்ளிகள் நிறுவியதையும் விவரித்தார். முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் வந்து, கல்லூரியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் கண்டு மகிழ்ந்து. மனைவி,குழந்தைகளிடம் இதுதான் என் க்ளாஸ் ரூம் என்று காட்டி மகிழ்ந்தீர்கள் என்றார். கல்லூரி நடத்துவதில் இப்போது உள்ள சிரமங்கள் என்னென்றும், நம் கல்லூரிகள்தான் கல்வியை வியாபாரம் ஆக்காமல் ஒரு சேவையாக நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார்.

ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்களை, முன்னாள் மாணவர் திரு.பா.வளன் அரசு பாராட்ட, முன்னாள் மாணவர், நீதியரசர் ஐ.டேவிட் கிறிஸ்டியன் வாழ்த்திப் பேசினார்.



முன்னதாக நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு தந்தார்கள்.

நான் சந்தித்த, Old Boys - பாண்டியன் கிராம பேங்க் ஸ்தாபக டைரக்டர், திரு.கள்ளபிரான், குணசிங், ஸ்டேட் பேங்க்-ஓய்வு பெற்ற ஜோஷுவா, Dr.மஹாகிருஷ்ணன், மகராஜன் ஆறுமுகம், ஆடிட்டர் சாமுவேல், எல்.ஐ.சி பி.மணி. என் 1962 பாட்ச் யாரும் பார்க்க முடியவில்லை.  முகநூலில் பார்த்து தொடர்பு கொண்டால் சந்தோஷம்.

Rev.டேனியல் பொன்னையா சங்கத்தின் ஆண்டு மலரை வெளியிட்டார். 
நிகழ்ச்சியை Dr.S.V.L. மைக்கேல் தொகுத்து வழங்கினார். மன்ற செயலாளர்திரு.எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்

Wednesday, January 22, 2014

விபத்தில்லா வாழ்க்கை

திங்கட்கிழமை 20/01/14 அன்று பள்ளி மாணவ/மாணவிகள் விபத்தில்லா வாழ்க்கை பெற சாலை பாதுகாப்பு  உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி மாநிலம் முழுதும் நடந்தது.

நெல்லை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மேல் நிலை பள்ளியில் திரு மு.செல்லையா - செயலர், கல்வி சங்கம், திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் - வரவேற்க,
 திரு.ப.தி.சிதம்பரம் -ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் தலைமை வகிக்க,
சிறப்பு விருந்தினர், திரு.ச.தங்கவேலு-R.T.O., திருநெல்வேலி,  தேசியக்கொடி ஏற்றினார்.

பாரதியார் படித்த பள்ளி அல்லவா? மாணவ/மாணவிகள், கடவுள் வாழ்த்தாக
                                               "ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் -பராசக்தி
                                                ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்"
என்ற பாரதி பாடலும் தமிழ்த் தாய் வாழ்த்தும் கோரஸாக பாடினர்.


திரு.தங்கவேலு, "ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்ட வேண்டாம். உரிமம் பெற R.T.O.,  அலுவலத்தில் ஏற்பாடு செய்கிறோம். சாலை விதிகளை மதிக்க வேண்டும்" என்றும் கூறினார். 


திரு செந்தில்குமார் -M.V.I .Gr.I., வாசிக்க, எல்லோரும் விபத்தில்லா தமிழகம் உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

                                     

முன் தினம் பள்ளியில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளும், N S S மாணவர்களுக்கு
 T ஷர்ட்டும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திரு.S.வடிவேல் முருகன், திரு K.G.கிருஷ்ணன் -முறையே தலைவர், பொருளாளர், பஸ் உரிமையாளர்கள் சங்கம், திரு.சீ.வ.ஜானகிராம் அந்தோணி-மாநில செயற்குழு உறுப்பினர், பஸ் உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.  பள்ளி தலைமை ஆசிரியர், திரு சூ.அழகிய சுந்தரம் நன்றியுரை அளித்தார்

Monday, January 13, 2014

சாலை பாதுகாப்பு வாரம் - மாணவர் பேரணி.

 

பொங்கல் விடுமுறை வருவதால், வட்டார போக்குவரத்து அதிகாரி கேட்டுக்கொண்டபடி, 17ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாணவ/மாணவிகள் பேரணி நடத்த திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தில் திட்டமிட்டோம்.
தலைமைச் செயலகத்திலிருந்து 13ந்தேதி திங்களன்று மாநில அளவில் எல்லா மாவட்டத்திலும் பேரணி நடத்த வேண்டும் என்று வந்த உத்தரவால், போக்குவரத்து ஆய்வாளர்கள் கேட்டதும் எங்கள் சங்க செயலாளர் எம். செல்லையா விரைந்து செய்த ஏற்பாட்டினால் பள்ளி மாணவர்கள் திரண்டனர். சங்கரன்கோவில், அம்பாசமுத்திரத்திலிருந்தும் பிள்ளைகள்.வந்தனர்.


பாளை வ.உ.சி மைதானத்தில் அணிவகுத்த பேரணி, மாவட்ட ஆட்சியாளர் கருணாகரன் பகல் 3.00 மணிக்கு கொடி அசைக்க,




குலவணிகர்புரம் லெவல் க்ராஸ் வரை ஊர்வலம் சென்றது. சங்கத்திலிருந்து கொண்டு சென்ற பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் பிள்ளைகளுக்கு கொடுத்து, பின் அவர்களை சங்க பொருளாளர் கே.ஜி.கிருஷ்ணன்(SGKR),
-ஸ்ரீதர்(KVS) தங்கள் சிடி பஸ்ஸில் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.

                                     

தன்னார்வத் தொண்டர்களுக்கு சங்கம் சார்பில் டீ ஷர்ட் வழங்கினோம்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:
திருநெல்வேலியில் இன்று பதவி வகுத்த வட்டார போக்குவரத்து அதிகாரி தங்கவேல், மாற்றலாகி செல்லும் முத்துசாமி, ராஜசேகர்(தென்காசி), மகாதேவன்(சங்கரன்கோவில்)
காவல்துறை டெபுடி கமிஷனர் தாம்ஸன், போக்குவரத்து ஆய்வாளர்கள் - செந்தில்குமார், இளமுருகன், சசி மேடம், விநாயகம்(வள்ளியூர்),
ராம்குமார்(அம்பை)

                                     

பஸ் உரிமையாளர்கள் -எஸ்.வடிவேல்முருகன்(தலைவர்),
மு.செல்லையா(செயலாளர்),   கபீர்(உபதலைவர்), கே.ஜி.கிருஷ்ணன்(பொருளாளர்)  ஸ்ரீதர்,  நாராயணம்குமார், வாலைமுருகன்,

ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வக்கீல் பிரபாகரன் ஆகியோருடன் பலர் வந்திருந்தார்கள்.



  

Saturday, January 11, 2014

ஜில்லா

          ஜில்லா

தியேட்டரில் சினிமா பார்த்து ரொம்ப நாளாச்சு. ஜில்லா பார்க்கலாம் என்று நானும் தாமரையும் மேட்னி ஷோ போனோம்.

ரொம்ப 'ஜில்'லா இருந்தது ஏஸி. தியேட்டரில் பாதி ஸீட் காலி. கூட்டத்தை பொருத்து ஏஸி டெம்பரேச்சரை கூட்டி/குறைத்து வைத்தால் என்ன?

அது போல சவுண்ட். பாட்டு வரிகள், ஏன் வசனம் கூட சில இடங்களில் புரியவே இல்லை. இளைய தளபதி ரசிகர் கூட்டம் அடித்த விசில், போட்ட கூச்சலில் ஏன் தியேட்டருக்கு வந்தோம் என்றாகி விட்டது.
 சில மாதங்கள் பொறுத்திருக்கலாம்.

விஜய், மோகன்லால் ஜோடி. ரஜினி, மம்முட்டி மாதிரி தளபதி சப்ஜெக்ட் தானோ என்று நினைத்தேன்.
 ஜில்லா வேற மாதிரி. படம் நல்லா இருந்தது. ஆனால் ஃபுல்லா சண்டை, வெட்டு, குத்து, டுமீல்தான்.

 ஓடும்

"முதல்ல நீங்க"

               "முதல்ல நீங்க"

சாலை பதுகாப்பு வாரம் அனுசரிக்க தொடங்கி 25 வருஷம் ஆச்சாம். இந்த வெள்ளிவிழா ஆண்டில் சிறப்பாக, ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடுகிறது இந்திய அரசு. "சாலையில் செல்கையில் 'முதல்ல நீங்க' என்று எப்போதும் சொல்லுங்கள்" என்ற தீம் அறிவித்திருக்கிறது.

விபத்துக்களை தவிர்க்கும் பொறுப்பு சாலைகளில் பயணிப்போரிடம் தான் இருக்கிறது என்று முதல்வர் இன்று தினமலரில் தன் வாழ்த்து செய்தியில் சொல்கிறார்.

முதல்ல நீங்க - அருமையான தகவல். கார் பைக் ஓட்டும்போது முந்திச் செல்ல முனைவோருக்கு முதல்ல நீங்கள் போங்க என்று வழி விடுங்கள். முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் உங்கள் வலது புறமிருந்து வரும் வண்டிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

அரசு என்னதான் கோடிக் கணக்கில் செலவு செய்து வேகத்தடை, சாலை மையத்தடுப்பு சுவர்கள், சிக்னல் பலகை, சிக்னல் விளக்கு, மலைப்பாதையில் உலோக தடுப்பு வேலிகள்,மாணவர்களுக்காக பாடப் புத்தகத்தில் சாலை விதிகளை அச்சிடுதல் செய்தாலும் 'விலையில்லா' உயிரை காப்பது நம் கடமை.

பைக் ஓட்டினால் ஹெல்மெட்டும், காரில் சீட் பெல்ட்டும் கட்டாயம் அணியுங்கள். செல்போனை ஸ்விட்ச் ஃஆப் செய்து விட்டு காரில் ஏறுங்கள். எங்காவது நிற்கும்போது மிஸ்ட் கால் பார்த்து கூப்பிட்டு பேசுங்கள்.
 மது வேண்டவே வேண்டாம்.

இலங்கையில் சாலை விதி என்று சொல்லவில்லை. "வீதி ஒழுங்கு" என்றுதான் சொல்கிறார்கள். நாமும் ஒழுங்காக செல்வோம் 

Thursday, January 2, 2014

சோனியா



   நேற்று சூப்பர் ஸிங்கர் பார்த்தேன். ரொம்ப நல்லா பாடியும் சோனியா ஏனோ தேர்வாகவில்லை. மறைந்திருந்து பார்த்து மார்க் போட்டது யாருன்னு தெரியலை.
 
 அவள் குரலில் என்ன நேர்ந்தது? அதை நடுவர்கள் சொல்லிச் சொல்லி காரணம் காட்டினார்கள்.
 
  அழகு மலராட என்று அன்று தன் சொந்த சோகத்தையே பாடிய சோனியாவுக்கு ஜானகி அம்மா, தானே மேடைக்கு வந்து பாராட்டியது யாருக்கும் கிடைக்காத பரிசு. அன்று ஆனந்தக் கண்ணீர் விட்ட பெண் நேற்று அழுவதை பார்த்த எனக்கே பார்க்க சங்கடமாகி விட்டது.
 
  சூப்பர் ஸிங்கராகி அருண் எக்ஸெல்லோ வழங்கும்  ஃப்ளாட்டை சோனியா வென்றதும்,  பாட்டு பாடுகிறாள்  என்று இவளை விட்டுப் பிரிந்த போன கணவன் வீடு திரும்பணும் என்பதே என் ஆசை.

   நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா?