Friday, May 8, 2015

   09/05/2015. இன்று எங்கள் அப்பா  நினைவு நாள்,

 அப்பாவை சந்தோஷமாக வைத்திருந்தால் அப்பாவும் நம்மை சந்தோஷமாக வைத்திருப்பார் என்று டெலிபோன் விளம்பரத்தில் பார்த்தோம்.
    அப்பாவை நாங்கள் சந்தோஷமாக வைத்திருந்தோமா தெரியலை. ஆனால் அவர் எங்கள் எல்லோரையும் மிக சந்தோஷமாகவே வைத்திருந்தார்.
 தன் மணிவிழாவுக்கு முன்னே மறைந்த அம்மாவை நினைத்து சோர்ந்து விடாமல் பிள்ளைகள் படிப்பு, கல்யாணம் எல்லாம் பார்த்து பார்த்து செய்து வைத்தார்.
    பெளர்ணமி அன்று இரவு ஆபீஸிலிருந்து வந்ததும் குளித்து விட்டு,  ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்வார்.பேரக்குழந்தைகளிடம் பிரியமாக விளையாடுவார்.
      டி.வி.எஸ் அதிபர்கள், ராஜம், கிருஷ்ணா, ரத்னம், ராமச்சந்திரன், யாரும் திருந்நெல்வேலி வந்தால் அவர்கள் வீட்டுக்கு வந்து சந்திப்பதோ, அப்பா டி.வி.எஸ் போய் பார்ப்பதோ தவறியதில்லை. புதிய மாவட்ட கலெக்டர் வந்து பதவி ஏற்ற அன்றே அவரை சந்திப்பார்.
      நெல்லை சங்கீத சபா, மெசானிக் லாட்ஜ், ரோட்டரி க்ளப், போன்ற அமைப்புகளில் தலைவர் செயலர் பதவிகள் வகித்து திறம்பட நடத்தினார்..
        அவர் நினைவில் வாழும்,
 
        சுப்பிரமணியன், பொன்னம்மாள், வடிவேல்முருகன், கல்யாணி . 

.


.

.

Wednesday, March 18, 2015

ஸ்கூல் பஸ்ஸில் ஏறினதும் வகுப்பு தோழிகள் எல்லோரும்
ராஜகுமாரி வந்துவிட்டாள் என்று கேலி செய்ய, வீட்டுக்கு
 வந்ததும், கோபமாகஅம்மாவிடம்,  ஆயிரம் பெயர்கள் இருக்க "ராஜகுமாரி"தான் எனக்கு வைக்க கிடைச்சுதா என்று   கேட்கிறாள்,
 நூடுல்ஸ் விளம்பரத்தில்.

 என் அண்ணன் இசக்கி,  அம்மாவிடம் கேட்டதாக மணி அண்ணன்
சொன்ன தகவல்:- அண்ணன் தம்பிக்கெல்லாம், முத்துவேல், சுப்பிரமணியன், சண்முகம், வடிவேல்முருகன் என்று முருகன் பேரா வைச்சு எனக்கு மட்டும் ஏன் இசக்கி"ன்னு பேர் வைச்சே?
 
இசக்கி அண்ணன்

        அம்மா சொன்னாராம் - "அப்போ நீ என் வயிற்றில் இருந்தாய். அப்பாவுடன் தேவநல்லூர் போய் விட்டு வரும்போது வழியில் பயங்கர வலி.  குழந்தை நல்லபடியாக பிறக்கணும், உன் பேரை வைக்கிறேன் என்று  நம்ம குலதெய்வமான இசக்கி அம்மனிடம் வேண்டிக் கொண்டே வர,  கோவில் தாண்டியதும் வலி பறந்தது. அதான் உனக்கு அந்த நல்ல பெயர்."
   
 'ஆனந்தம்' படத்தில் இங்கே தவசி யாருங்க? ரிஜிஸ்டர் தபால்.அவர் கையெழுத்து போடணும் என்று கேட்டு வரும் தபால்காரரிடம், விஜயகுமார்(தவசி) ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை பேர் சொல்லிக் கூப்பிட்டது நீதான் என்று சொல்வாரே அது போல எங்க அப்பாவை "சோமு" என்று பெயர் சொல்லி கூப்பிடுபவர், தாத்தா தவிர, அப்பாவின் பள்ளித் தோழர் ஐயாக்குட்டி முதலியார் மட்டும்தான்.
   ஒருநாள் போன் மணி அடிக்க இசக்கி அண்ணன் எடுத்து -ஹலோ சொல்ல, "சோமு இருக்கானா?" என்று அவர் கேட்க, "சோமு இருக்கானே" என்று வேடிக்கையாக சொல்ல, அப்பாவும் அங்கே வர, பயந்து ஓடி விட்டானாம். அப்பாவுக்கு ஒரே சிரிப்பு.
அன்றாடம் சினிமாவிலும் டிவியிலும் நாம் பார்க்கும் நிகழ்ச்சி, நம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுவதாகவே அமைகிறது பாருங்கள்.

Sunday, March 15, 2015

நெல்லை ம.தி.தா இந்து கல்லூரியின் கல்வி சங்கசெயலர்
திரு.மு.செல்லையாமோட்டார் பைக்கில் வரும் மாணவ மாணவிகள்
 பலரிடம் டிரைவிங் லைசென்ஸ்  இல்லை என்று அறிந்து எல்லோருக்கும் லைசென்ஸ் பெற்றுத்தர விரும்பினார். 
வட்டார போக்குவரத்து அதிகாரி திரு.கு.தங்கவேலு அவர்களை அணுகியதும், அவர் முதலில்  போட்டோவுடன் கூடிய விண்ணப்பம் தருவோம்.  பிறகு  பயிற்சி உரிமம் வழங்குவோம் என்றார். 175 பேரை இரண்டு நாளாக தன் பஸ்ஸில் R.T.O அலுவலகத்திற்கு அழைத்து வந்து விண்ணப்பம் சமர்ப்பணம் செய்தார் செயலர் திரு.மு.செல்லையா
   இந்துகல்லூரியும், நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், 
வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளைர்கள் சங்கமும் சேர்ந்து நடத்தும் விழாவாக 14/03/2015 காலை 
11.00 மணிக்கு பேட்டை இந்து கல்லூரியில்,  முன்னாள் கல்வி சங்க செயலாளர் திரு எ.ஏல்.எஸ் நினைவரங்கில் நடந்தது.
ஏ.எல்.எஸ்ஸின் மகன் திரு சு.சண்முகமும் வந்திருந்தார்

    முதலில் திரு நயினா முகமது, உரிமையாளர், சிட்டி டிரைவிங் ஸ்கூல், விடியோ மூலம் விபத்து  நிகழ்ச்சிகளை காட்டி சாலையில் கவனம் எவ்வளவு முக்கியம் என்று சொல்லி, சாலையில் காணும் எச்சரிக்கை, உத்தரவு, தகவல் சின்னங்களின் அச்சுப் பிரதிகளை வழங்கினார்.
   கல்விச் சங்க பொருளாளர், திரு.தளவாய் தீ.ராமசாமி தலைமையில், திரு செல்லையா வரவேற்றார். தன் உரையில், விழாவின் நோக்கம் என்ன என்றும், ஒத்துழைத்த எல்லோருக்கும் நன்றியும் கூறினார், ,  தலைமை உரையில் திரு.தீ.ராமசாமி யும் வாழ்த்துரையில் திரு.ப.தி.சிதம்பரம் இந்துக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர், முனைவர்.ப.சின்னத்தம்பி கல்லூரி முதல்வர், முனைவர் நா.ராஜலிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைபாளர், திரு.சோ.வடிவேல்முருகன் தி-லி மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம், திரு ப.பாலசுப்ரமனியன் வேணி பஸ், ஜனாப்.முகமது அப்துல் காதர், ஜப்பான் பஸ், திரு.சீ.பார்த்தசாரதி சீதாபதி டிரான்ஸ்போர்ட், திரு..ஸ்ரீதர் கே.வி.வி பஸ், 
திரு.டி.சரவணன் கே.எஸ்.ஏ பஸ்- சங்கரன்கோவில்  

ஆகியோர், ஓட்டுனர் உரிமம் , சாலை விதிகள், சிக்கனம், பற்றியெல்லாம் சொன்னார்கள்.
  திருமதி.ஜீ.சசி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 1 அவர்கள், தான் காண நேர்ந்த மோட்டார் பைக் விபத்துகளில் பெற்றோர் பட்ட வேதனை பற்றி கூறி பிள்ளைகள் கவனமாக ஓட்ட வேண்டுமென்றார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் திரு கு.தங்கவேலு, ஓட்டுனர் உரிமமும், திரு.வடிவேல்முருகன் தன் கைப்பட வரைந்த சாலை விதிகளின் பட நகலையும் மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்திப் பேசினார்.

   திரு.ஜானகிராம் அந்தோணி நன்றி உரையில் திரு.செல்லையாவின் முயற்சியை பாராட்டி, வாழ்த்திய எல்லோருக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கும், தொகுத்து வழங்கிய முனைவர்.கோ.சங்கர வீரபத்திரனுக்கும் நன்றி கூறினார்.
  

Thursday, February 19, 2015

       BASKET BALL விளையாட்டு ஜேம்ஸ் நெய்ஸ்மித் (JAMES NAISMITH) என்ற அமெரிக்கரால் 1891ம் ஆண்டு வடிவமைக்கப் பட்டது. முதல் விளையாட்டு தொடங்கிய போது, "NAISMITH GAME" என்று பெயரிடலாம் என்று எல்லோரும் சொன்னார்களாம்.  அவர்தான் விளையாட்டில் பாஸ்கெட் இருக்கு, பால் இருக்கு, ஏன் பாஸ்கெட் பால் என்று சொல்லக்கூடாது என்றாராம்.  நம்மூரில் கூடைப்பந்து ஆனது.
முதலில் வெறும் கூடை மட்டும் ஒரு போஸ்ட்டில் கட்டி விளையாடுவார்கள். கோல் போட்டதும் கம்பு கொண்டு கீழிருந்து தள்ளி எடுப்பார்கள். 
      பிறகு கூடையிலிருந்து பந்து கீழே விழுமாறு ஓட்டை போட்டார்கள். 1906ல் தான் இரும்பு வளையம், வலைக்கூடை, கரும்பலகை எல்லாம் அமைக்கப் பட்டதாம்.Y M C A,,  அமெரிக்க ராணுவ வீரர்கள், கல்லூரி/பள்ளிகளிலெல்லாம் ஆடத் தொடங்கி உலகளவில் பிரபலமானதாம்.
திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூடை பந்து மைதானத்தை  உலகத்தரத்திற்கு இணையாக, சுமார் 7 லட்சம் செலவில் புதுப்பித்து நேற்று 18/2/15, புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு, கல்விச் சங்கத் தலைவர் திரு மீனாக்ஷிசுந்தரம் திறந்து வைக்க, செயலர் திரு
மு.செல்லையா வரவேற்றார்.
   இந்துக் கல்லூரி மாணவர்களும் இந்து மேல் நிலைப் பள்ளி மாணவர்களும்  சேர்ந்து ஒரு அணி. வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு அணியாகவும் ஆடத் தொடங்கி, இந்துக் கல்லூரி அணி
 39 - 28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
 இந்து மேல்நிலைபள்ளி முன்னாள் மாணவர் திரு. ராஜசேகர் படிக்கும் போது கூடைப் பந்து வீரர். அதன் பின் பல ஆண்டுகள் மாணவர்களுக்கு கோச் ஆக இருந்து ஆட்டம் கற்றுத் தந்தாராம். மாநில அளவில் பல பட்டங்களும் பரிசுகளும் வாங்கியவர். பணி ஓய்வு பெற்று நெல்லையில் வசிக்கிறார்.அவருக்கு கல்விச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதை, செயலர் திரு செல்லையா வழங்கினார்.
விளையாட்டு வீரர்கள், நடுவர்கள், எல்லோரும் நினைவுப் பரிசுகள் பெற்றார்கள்.

Thursday, December 11, 2014

நேற்று பாரதியார் பிறந்தநாள் என்றதும் அவர் படித்த மதுரை திரவியம் தாயுமானவர் இந்து மேல்நிலை பள்ளிக்கு சென்றேன். கள்ளிபட்டி(தேனி மாவட்டம்) நல்லாசிரியர் திரு.சு.குப்புசாமி சிறப்பு விருந்தினர், பள்ளியின் கல்வி சங்க் செயலாளர் திரு.மு.செல்லையா, திரு.கணேசன்(தேனி)தலைமை ஆசிரியர் திரு.சுப்பையா பங்கேற்க, விழா நிகழ்ச்சிகளை ஒரு மாணவன் அழகாக தொகுத்து வழங்கினா(ர்)ன்.
திரு.கணேசன் பாரதியாரைப் பற்றி ஒரு கவிதையுடன் பேசினார். சிறப்பு விருந்தினர் திரு.குப்புசாமி பேசும்போது சொன்ன தகவல்கள்:
சீவலப்பேரியில் வாழ்ந்த சின்னசாமி ஐயர், எட்டயபுரத்திற்கு குடிபெயர்ந்து, ராஜா அரண்மனையில் பணியில் சேர்ந்தார். 1882ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று மகன் சுப்பிரமணியம் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி உயர்நிலை பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படித்தார் சுப்பிரமணியம்.
1893ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு தமிழ்ப் புலவர் மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி, அதில் கலந்துகொண்ட சுப்பிரமணியத்தை  பாராட்டி பாரதி என்று அழைத்தார். அன்றிலிருந்து சுப்பிரமணிய பாரதி என அழைக்கப் பட்டார்.
சின்ன வயதில் அவர் பெற்ற புகழைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதிநாதன் என்பவர், பாரதியிடம், தம்பி உன்னால் "பாரதி சின்னப் பயல்" என்று பாட முடியுமான்னு கேட்டார்.
பாரதி சொன்ன கவிதை:
  "காரது போல் நெஞ்சிருண்ட
   காந்திமதிநாதனைப்
   பார் அதி சின்னப் பயல்"
தன்னை சின்னப்பயல் என்று சொன்ன எதிரியை "அதி சின்னப் பயல்" என்று பாடிவிட்டார்.
1897ல் பாரதிக்கு செல்லம்மாளுடன், நான்கு நாள் விழாவாக கல்யாணம் நடந்ததாம்.. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், பின், சுதேசமித்திரன் பத்திரிகை உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்தாராம்.

ஒரு நாள் பத்திரிகை ஆபீசிலிருந்து வீடு செல்லும்போது, அன்று வாங்கிய சம்பள பணத்தை அப்படியே தான் வந்த குதிரை வண்டிக்காரனின் மனைவி குழந்தைகளின் வைத்திய செலவுக்காக தந்துவிட்டாராம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானைக்கு தேங்காய், பழம் உண்ணத் தருவாராம். ஒரு நாள் அவரை, யானை கிட்ட போகாதே, அதற்கு மதம் பிடித்து விட்டது என்று தடுத்தும், "அது நான் வணங்கும் பராசக்தி,என்னை ஒன்றும் செய்யாது" என்று  யானை அருகில் போனார். யானையோ அவரைத் தும்பிக்கையால் தூக்கி வீசிவிட்டது.
ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சில நாள் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு வந்தார். ஆனாலும் அன்றிலிருந்து மிகவும் பலவீனமானார்.
 "காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
   காலருகே வாடா, சற்றே உதைக்கிறேன்"
 என்று பாடிய மகாகவி 1921 செப்டம்பர் 12 அன்று மறைந்தார்.

Friday, November 21, 2014

KIDDIVAL

RmKVயின் கிட்டிவல் தொடங்கி 25 அருஷம் ஆச்சு. போன சனிக்கிழமை
 சாரா டக்கர் காலேஜில் நடந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து 80 பள்ளிகளின் 1500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகமாக தங்கள் திறமையை காட்டினார்கள்.
பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி (75 மார்க்)முதல் பரிசையும்,ஜெயேந்திரா கோல்டன் ஜூபிலி (65) இரண்டாம் பரிசையும், பாரத் வித்யாலயா CBSE (50) மூன்றாம் பரிசையும் பெற்றது.
இந்த ஆண்டின் புதிய போட்டி - SPELLING BEE
மேலை நாடுகளில் இந்த விளையாட்டில் இந்திய வம்சாவளி குழந்தைகள்தான் அதிகம் ஜெயிக்கிறார்கள். பிள்ளைகள் டாண் டாண்னு சொன்னார்கள்.
போட்டியில் ஸ்பெல்லிங் கேட்ட சில வார்த்தைகள் -
 SIGNIFICANCE ; ETIQUETTE ; COMMITTEE ; RESTAURANT ; CALENDAR

JUMBLE WORDS-  TOPMREUC ; AGHRMRUBE ; LESENKTO
E T I Q U E T T E

TOPMREUC ---COMPUTER
FANCY DRESS
"கனவு காணுங்கள்"

 
Vivekanadar as statue
   

Monday, July 21, 2014

 இன்றும்  ஒரு சதாபிஷேகம்.

முந்தாநாள், சனிக்கிழமையன்று நண்பர் என்னைப்பார்க்க வரேன் என்று போன் பண்ணினார். ஒரு சதாபிஷேக நிகழ்ச்சி.பிறகு பார்க்கலாம் என்றேன். திங்களன்று மீண்டும் கூப்பிட்டு, இன்னிக்கு வரலாமான்னு கேட்டார். இன்றும் ஒரு சதாபிஷேகம். மேலச்செவலுக்கு போகிறேன்
. அன்று என் மாமாவுக்கு. இன்னிக்கு என் அத்தானுக்கு.

மேலச்செவல் பண்ணையார் வீட்டைப்பற்றி THE HINDU நாளிதழில் சில மாதங்கள் முன் படித்திருப்பீர்கள். அவர் வீட்டிலேயே நடந்த சுப நிகழ்ச்சிக்கு ஊரே திரண்டு வந்தது. சொந்தங்கள் நாங்கள் மீண்டும் கூடினோம்.

மகன் சுரேஷ், மருமகள் சித்ரா

எஸ்.கல்யாணி,சண்முகம்(பேபி), பத்மா
,முத்துலக்ஷ்மி, பிச்சம்மாள்,முனைவர்.ரமாபிரபா, ஆர்.கல்யாணி
Family Chart
கெட்டி மேளம், கெட்டி மேளம்


மாங்கல்யம் தந்தது நானேநா............
 
                            வாழ்க வளமுடன்
முந்தாநாள் சதாபிஷேகம் கண்ட கோமதிநாயகம் தம்பதி
ராதா,  ரமணி,  பத்மா, வடிவேல்முருகன்,  கல்யாணி, சங்கர்,   லக்ஷ்மனன், செல்விலோகா  ,பொன்னம்மாள்,  தாயுமான ராமலிங்கம்,  சுப்பிரமணியன்

.

.