Tuesday, May 12, 2009

மயிலே மயிலே இறகு போடு,


என்று நாம் கேட்டாலும் போடாது. முருகா முருகா கடலை போடு (நிஜக்கடலைதாங்க- இப்போது கடலைபோடுதல் என்றால் அர்த்தம் வேறு) என்று தினமும் எங்கள் வீட்டு வாசலில் வந்து, கேட்டு சாப்பிட்டு விட்டு என்றைக்காவது ஒரு இறகு போட்டுச் செல்லும். பேத்திகளும் அதை எடுத்து சாமி படத்திலும் புத்தகத்திலும் வைத்திருக்கிறார்கள்.

நண்பர்கள் என்னிடம், "எல்லார் வீட்டு வாசலிலும் அவர்கள் கார், பைக் நிற்கும். உங்கள் வாகனம் அருமை" என்கிறார்கள்.

எங்கள் பகுதியில் சில மயில்கள், வாழ்கின்றன என்றே சொல்லலாம். பூட்டியுள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில்தான் வாடகையில்லாமல் இரவு வாசம். பகலில் இரை தேடி செல்கின்றன.ஒரு நாள் அரிசி, பொட்டுக்கடலை என்று தாமரை போட்டதால் அவை தினமும் வாசலில் வந்து நிற்கும். தாமரையும் வாடா, வாடா என்று சொல்லி ஒரு கை பொட்டுக்கடலை போடுவாள். பேத்திகளுடன் நானும் வாசல் படியில் உட்கார்ந்து பார்ப்பேன்

ஒருநாள் மேகமூட்டமாக இருந்ததால் தோகை விரித்து அழகாக ஆடியது. கேமராவை எடுத்து வருவதற்குள் மயிலுக்கு மூட் போய்விட்டது போல. பறந்து விட்டது. மயில்களை நிறைய படங்கள் எடுத்தேன். பிட் மே மாதப்போட்டிக்கு சப்ஜெக்ட் பறவைகள் என்றதும் செலக்ட் செய்து இந்த படம் அனுப்பினேன்