Saturday, June 14, 2008

கமல்ஹாசன், கமல்ஹாசன் மற்றும் பல கமல்ஹாசன்கள்

அடுத்த கமல் படத்தின் விளம்பரத்தில் நடிகர் லிஸ்ட் இப்படி இருக்குமோ?

இது கமலோ, இதுவும் கமலோ என்று வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் (பாத்திரம்தான், கதையில்லை)கமல்ஹாசனோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு வேடங்கள் அணிந்து நடித்துள்ள படம் தசாவதாரம்.

வசனமும் அவர்தானாம். நெப்போலிய குலோத்துங்கன், "யாம் அறிவோம், யாம் அறிவோம்" என்று சொன்னதும், ரங்கராஜன், "உன்னை அறியாமல் ஹரிஓம், ஹரிஓம் என்று எத்தனை முறை சொல்லிவிட்டய்", என்று கேட்டதில் கற்பனையும்,
கோவிந்தன், போலீஸ் ராவ் இடமும் நரசிம்மராவ் இடமும், ராவோட ராவாக இருந்து செய்து விடுங்கள் என்று சொல்வதில் ந்கைச்சுவையும் நன்றாக இருக்கிறது.

6.30க்கு தொடங்கிய படம் இன்னும் இன்டர்வல் வரவில்லையே என நினைக்க, 8 மணிக்கு இன்டர்மிஷன் வந்தது. சரிதான் இன்னும் 1 1/2 மணி நேரம் ஓடுமே என்று நினைத்து ஒரு ப்ரூ காபி சாப்பிட்டுவிட்டு அவளுக்கு ஒரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு வந்தேன்

டைரக்டர்கள் பி.வாசு, சந்தானபாரதி எல்லோரும் வந்துவிட்டார்கள், ரவிக்குமார் வந்ததும் படம் முடிந்துவிடுமே என்று எதிர்பார்க்க வைத்துவிட்டார், படத்தின் டைரக்டர்.

Friday, June 13, 2008

மூவர் ஏற்றிய தமிழ் விளக்கு

'இணையத்தில் வளர் தமிழ்' என்ற தலைப்பில், வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழ் ஆய்வின் பயன்பாடும் பற்றிய கருத்தரங்கு நெல்லையில் சென்ற வாரம் நடந்தது. திரு.சேகர் பொன்னையா, திரு.முல்லை ச.முருகன் இருவரும் ஒருங்கிணைத்திருந்தார்கள்.

வாஷிங்டனிலிருந்து வந்த முனைவர் சொ.சங்கர பாண்டி பேசுகையில், அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழில் பேசும் வாய்ப்பே மிகவும் குறைந்து வருகிறது என்றார். அமெரிக்க மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்கள், தமிழ் பள்ளிக்கூடங்கள் அமைக்க கூட்டு முயற்சி செய்து வருகின்றன என்றும், தமிழ் நாட்டில்கூட பள்ளிகளில் தமிழ் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என் கட்டாயப்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. தமிழ் மொழியை மதிக்கவும், ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசும் நிலை வர வேண்டும் என்றார்.

தமிழ் வலைப்பதிவு பற்றி சொல்கையில் சங்கர பாண்டி, நம் கதையோ, கட்டுரையோ, கருத்துக்களோ பத்திரிகைக்கு அனுப்பி வெளிவருவதைப் பார்க்கக் காத்திருக்க வேண்டியதில்லை. நம் எழுத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் உடனே படிக்க வைக்க முடிகிறது என்றார்.

கோவை வாசியான திரு.காசி ஆறுமுகம், தான் அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் இருந்தபோது தமிழ்மணம் வலைத்திரட்டியை தொடங்கியதையும், அதில் பதிவுகள் நேரம் வாரியாக வெளியிடப்படுவதையும், பின்னூட்டங்கள் மூலம் வாசகர்கள் பதில் எழுதுவதால் வேகமான கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதையும் கூறினார். நாம் எழுதுவதை நாமே தணிக்கை செய்து, நல்ல தமிழில் நல்ல கருத்துக்களை எழுதி இந்த உயிருள்ள ஊடகத்தை எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்துப் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.கோ.பிரகாஷ் அவர்கள், மொழிதான் ஒரு சமூகத்தின் அடையாளம். தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே நாம் கர்வப் படவேண்டுமென்றார்.மூன்று தமிழ் சங்கங்கள் தொடங்கியதே தமிழ் வளர்ச்சிக்காகத்தான். இலக்கியமே கற்பனை கலந்த கதையின் வடிவமைப்புதான். திராவிட மொழிகள் அனைத்துக்கும் ஆணிவேர் தமிழ்தான் என்று கால்டுவெல் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் கூட எழுதிச் சென்றார்கள்

திரு. பிரகாஷ், தான் ஐ.ஏ.எஸ் பயிலும் போது தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துக்கொண்டதாகவும் அப்பொழுதுதான் தமிழ் மொழியின் நீளம், அகலம், விஸ்தீரணம் தன்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார். இந்திய மொழிகளிலேயே ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக தமிழ்தான் வலைப்பதிவில் அதிகம் காண முடிவதால் உலகெங்கிலும்தமிழர்கள் வாழ்ந்து தமிழைப் பரப்புவது தெரிகிறது.

நாணயத்தின் மறு பக்கத்தை காட்டிய திரு.பிரகாஷ், நகரத்தன்மை வாய்ந்த ஊர்களில் தமிழ் எழுதுவது, பேசுவது, படிப்பதையே சமூகம் கீழ்நிலையில் பார்க்கிறது என்றார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் ஞாயிறு முதல் சனி வரை கிழமைகள் கூட அவர்களுக்கு தமிழில் சொல்லத்தெரிவதில்லை. அடுத்த தலைமுறை தமிழை மறந்துவிடாமல் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை பல்லாண்டு திகழச்செய்ய வேண்டும் என்றார்.

ஹுஸ்டன் நகரில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் முனைவர்.நா.கணேசன், முதுகலையிலும் தமிழ் ஒரு விருப்பப் பாடமா இருக்க வேண்டும் என்றார். தமிழ் பத்திரிகைகள் குமுதம், விகடன் யுனிகோட் முறைக்கு மாறி தங்கள் இதழ்களை வெளியிடுகின்றன என்றும் தமிழில் எழுத விரும்பும் பதிவர்கள் தமிழ்நெட் 99 தட்டச்சு பயன் படுத்தி சுலபமாக தங்கள் பதிவுகளை வெளியிடலாம் என்றும் கூறினார்.

முனைவர்.மு.இளங்கோவன், கருத்தரங்கு நடந்துகொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிகளை புகைப் படங்களுடன் தன்னுடைய வலைப்பதிவில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் டி.ஏ. பிரபாகர் நன்றி கூறினார்.