Friday, August 10, 2007

78 ; 45; 33 1/3 நினைவிருக்கிறதா?

இந்த பழைய இசைத்தட்டுக்களுக்கு 21ம் நூற்றாண்டைக் காட்ட அமெரிக்காவில் ஒரு முயற்சி. முந்திய டர்ன்டேபிள்(ப்ளேயர்) ஒரு ரேடியோ அல்லது ஒரு ஆம்ப்ளிபையரில் தான் இணையும். இப்போது புதிதாக கம்ப்யூட்டருடன் இணையும் டர்ன்டேபிள் வருகிறது. அந்த ரிகார்டுகளிலிருந்து ஹார்ட் டிஸ்க்கிற்கும் அதிலிருந்து எம்பி3 ப்ளேயரிலோ சிடியிலோ பதிவு செய்யலாம்.ஆயிரக்கணக்கில் உபயோகித்த அருமையான ரிகார்டு ஸ்டாக் வைத்துள்ள ஸ்டோர்கள் ஒரே மகிழ்ச்சியாக உள்ளன. ஒரு ஸ்டோர் உரிமையாளர் கூறுகிறார். ஒரு ரிகார்டை நான் ப்ளே செய்யும்போது கேட்பவர்கள் எல்லோரும் "சிடியில் கேட்பதைவிட நன்றாக உள்ளது. அந்த க்ரூவில் (groove)என்ன மந்திரம்?" என்று ஆச்சரியப்படுகிறார்கள். உண்மைதான். முன்னெல்லாம் ஆர்க்கெஸ்ட்ராவில் அத்தனை இசைக்கருவி வாசிப்பவர்களும் உண்டு. கருவிக்கேற்ற லோ /ஹை frequencyயில் பதிவாகும். இப்போதுதான் கீ போர்டு வந்துவிட்டதே. உங்கள் வீட்டில் பழைய ரிகார்டுகள் உள்ளதா? தூசி தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

Wednesday, August 8, 2007

வாங்க, இம்பாலா காத்துக்கிட்டிருக்கு

1950களில் எங்கள் வீட்டுத் திருமணங்களுக்கு பெண்/மாப்பிள்ளை அழைப்புக்கு பீடி கம்பெனி அதிபரிடமிருந்து ப்யூக் அல்லது சிமென்ட் கம்பெனி அதிபரின் கெடிலாக் திறந்த கார் வரும். நான் அவ்வாறு சென்றதும் என் மைத்துனரின் புதிய 1970 மாடல் இம்பாலா தான். எங்கள் வீட்டுகாரே 1947ல் அப்பா புதிதாக வாங்கிய ஷெவர்லெ ப்ளீட் மாஸ்டர். அதை இப்போது என் மகன் ரெஸ்டோர் செய்துகொண்டிருக்கிறான்.

பாப்புலர் சைன்ஸ் பத்திரிகையில் ஆண்டு தோறும் புதிய மாடல் ஷெவர்லெ, ப்ளிமத், போர்டு கார்களை சோதனை ஓட்டம் செய்து தர வரிசை எழுதுவார்கள். ஆர்வமுடன் படிப்பேன். பின் நான் தமிழ் நாட்டின் பெரிய ஆட்டோ டீலரின் ச்ர்வீஸ் பிரிவில் பணி புரிந்தபோது எல்லா வகை கார்களையும் சோதனை ஓட்டம் செய்திருக்கிறேன். அமெரிக்காவின் இந்த பெரிய கார்கள் மீது எனக்கு அத்தனை ஆசை.

மே மாதம் இங்கு வந்ததும் சாலையில் ஓடும் கார்களில் 7/10 ஜப்பான் கார்களைப் பார்க்கிறேன். உலகிலேயே அதிக கார் விற்கும் ஜெனரல் மோட்டார்ஸ் யு.எஸ்ஸிலேயே டொயோடாவிடம் போட்டியிட வேண்டியிருக்கிறது. க்ரைஸ்லர் கார்ப்போரேஷன், டெய்ம்லர்(ஜெர்மனி) கைக்குப்போய் இப்போது மீண்டும் கை மாறப்போகிறது. போர்டு மோட்டார் தன்னிடம் உள்ள பிரிட்டனின் லேன்ட்ரோவர், ஜாக்குவார் இரண்டையும் விட்டு விடும் போலிருக்கிறது.

ஒரு கார் விற்றால் அதில் $ 1000 தொழிலாளர்களின் இன்ஷுரன்ஸ்க்கு செலவாகுமாம். கேஸ்(பெட்ரோல்தான்) விலை உயர்ந்து கொண்டிருப்பதால் புதுக்கார்கள் விற்பனை முன்பு போல இல்லை.விளம்பரங்களில் 30 மைல்/கேலன் என்று புதிய கார்கள் கூவுகின்றன. கெடிலாக் டீலர்கள் ஜி.எம் ஒப்புதலுடன் வாரண்டி தாண்டியும் இலவசமாக வேலை செய்து தருகிறார்கள். போர்டு தன் ப்யூஷன் காரை, கேம்ரி(டொயோடா), அக்கார்ட்(ஹோண்டா) கார்களுடன் ஒப்பிட்டு, 400 டிரைவகளின் ஓட்டு மூலம் ப்யூஷன் தான் பெஸ்ட் என்கிறது. எப்படி இருக்கிறது?.

லீ அயகோக்கா(Lee Iacocca-என் உச்சரிப்பு சரிதானே) தன்னுடைய

"Where Have All tha Leaders Gone?" புதிய நூலில் கூறியவை.

* சென்ற ஆண்டு General Motors, Ford and Chrysler கம்பெனிகளின் தலைமைகளை அழைத்து ஆலோசனை செய்ய ஜார்ஜ் புஷ் காலதாமதம் செய்தது ஒரு காரணம்.

*தேர்தலிலோ, C E O பதவிக்கோ போட்டியிடுபவர்களிடம் "Nine C's of Leadership(First, Curiosity- last, Common Sense--Google பாருங்கள் ஹோம் மேக்கரிடமும் தேவை) கட்டாயம் இருக்க வேண்டும். யாரிடமும் 9-ம் முழுமையாக இல்லை.

* யு.எஸ்ஸின் ஆட்டோ தொழில் பழைய வலிமை பெற் நஷ்டத்தைத் தவிர்த்து, கார் தயாரிப்பாளர்கள், யூனியன்கள்,அரசு கூடி திட்டமிட வேண்டும்.



என் கவலை அமெரிக்க மூவேந்தர்கள் ஜப்பான் படையெடுப்பால் சிற்றரசர்கள் ஆகி விடுவார்களோ என்பதுதான்.

Tuesday, August 7, 2007

அதான் எனக்கு தெரியுமே

டிவியில் புதிய பாடல்கள் என்று ஒரு நிகழ்ச்சி. நான்கு சிறுமிகளின் போட்டி. நானும் மார்க் போட்டுக் கொண்டு வந்தேன். "கண்ணும் கண்ணும்..." பாட்டு பாடியவர்களே என்னிடம் மார்க் பெற்றார்கள். பாட்டு போலவே தபேலா.ட்ரம்பெட் வாசித்த லக்ஷ்மண் ஸ்ருதி குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.நடுவர் மதுமிதா அவர்களும் அச்சிறுமிகளுக்கே பரிசு என்றார்கள். தன்னுடைய கமெண்டில் உச்சரிப்பு பற்றியும் கமகங்கள் பற்றியும் அழகாகப் பாடிக்காட்டினார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் நானும் இது மாதிரி ஒரு போட்டிக்கு நடுவர் குழுவில் ஒருவனாக இருந்தேன். ஹோட்டல் காரன் அழகப்பனுக்கு நாட்டியம் பற்றி என்ன தெரியும் கீதா நினைத்தது போல, மோட்டார்கம்பெனிக்காரனுக்கு சங்கீதம் என்ன தெரியும் என்று பிற நடுவர்கள் கேட்டனராம். என்னை அழைத்த அமைப்பாளருக்கு ஒரு நம்பிக்கை. நானும் பாரதியார் பாட்டு என்றால் சினிமாக்களில் வந்த அவருடைய பாடல்களைத்தானே மாணவர்கள் பாடுவார்கள், அதான் எனக்கு தெரியுமே என்று ஒப்புக்கொண்டேன்.
அன்று நன்றாகப் பாடிக்கொண்டு வந்த ஒரு மாணவன் ஒரு பாட்டில் ஒரு அடி மறந்து ஸ்டக் ஆகிவிட்டான். அவனாக நினைவு வந்து பாட சில வினாடி பார்த்துவிட்டு "நானொருவன்...." என்று அடியெடுத்து தந்தேன். கண்களாலேயே நன்றி கூறி தொடர்ந்து பாடி முடித்தான்.
டிவி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் தாயாரிடம் கேள்வி கேட்க அவர்களும் என் மகள் நன்றாகப் பயிற்சி செய்தாள். பரிசு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்கள். இது பரிசு கிடைக்கவில்லையே என்ற கவலையுடன் பரிசு எப்படி மற்றவர்களுக்கு என்றும் அவர்களை நினைக்கதூண்டுமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

சரி, இன்றைய கேள்வி: "நானொருவன்......."என்று நான் அடி சொன்ன அந்த பாரதி பாட்டு எது?

இரண்டு படங்களில் வரும். ஆனால் ஒன்று இசைத்தட்டு மட்டும் வந்தது. ஏனோ படத்தில் இடம் பெறவில்லை.