Wednesday, August 31, 2011

ஆயிரம் பிறை கண்ட பேராசிரியர் சிவ.ராமச்சந்திரன்.

திருநெல்வேலி ம.தி.தா இந்து கல்லூரியில் 1950- 70களில் படித்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், இன்று உலகில் எங்கிருந்தாலும் இந்த பெயரைக் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள். எகனாமிக்ஸ் லெக்சரராக தொடங்கி முதல்வராகி ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு.சிவ.ராமச்சந்திரனுக்கு சதாபிஷேகம்



ஆகஸ்ட் 10, புதன்கிழமையன்று அவர் இல்லத்தில்(203, ஐந்தாவது தெரு, பெருமாள்புரம், திருநெல்வேலி 627 007) சிறப்பாக நடந்தது.



எண்பது வயது நிறைவானவரை ஆசீர்வதிக்கவும், ஆசி பெறவும் கூடியவர்களைப் பார்க்கவே பரவசமானது.





ராமச்சந்திரன் - ராஜலக்ஷ்மி தம்பதியின் மகள் பகவதி, மருமகன் கோபாலகிருஷ்ணன், மகன் கண்ணன், மருமகள் பிரதிமா, பேத்திகள் கோ.பூர்ணிமா, க.அனிக்கா, விழாவை மிக நேர்த்தியாக் ஏற்பாடு செய்திருந்தார்கள்.








வள்ளியூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் நெல்லையில் முதன் முதல் அறிமுகமானது எங்களுக்குத்தான். என் பெரியண்ணன் திரு.முத்துவேல்(அம்மா, அப்பா கூப்பிடுவது குட்டி என்று)1951 - 52 ல், மெட்ராஸ் லொயோலா காலேஜில் பி.எஸ்ஸி படித்தார். ஹாஸ்டலில் நண்பரான ராமச்சந்திரன் பி.ஏ மாணவர்.

திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் தான் அப்போ எல்லாம். லீவில் ஊருக்கு வரும்போது சேர்ந்தே வருவார்கள். அண்ணனுடன் அவரும் எங்கள் வீட்டுக்கு வந்து, குளித்து, லஞ்ச் சாப்பிட்டு, மதியம் பயோனியர் பஸ்ஸில் வள்ளியூர் செல்வார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். எங்கள் குடுமபத்தில் ஒருவராகவே ஆனார். அவருடைய கல்யாணத்திற்கு அப்பா, அம்மா நாங்கள் எல்லோரும் மதுரைக்கு சென்றோம். வீட்டு விசேஷம் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார். நல்லது செய்தால் பாராட்டியவர், தவறு செய்தால் கண்டிக்கவும் செய்தார். என் சின்ன அண்ணன் சண்முகம் இந்து கல்லூரியில் அவருடைய மாணவர்.

ஒருநாள் கல்யாண விருந்து முடிந்ததும் என் மாமா, அண்ணன் ராமச்சந்திரனிடம் தாம்பூலத் தட்டை தந்து வெற்றிலை போடு என்றார். வேண்டாம் பழக்கமில்லை என்றார். நீயும் குட்டி மாதிரி தானா என்று கேட்க, குட்டி காபி குடிப்பானே என்றார் ராமச்சந்திரன். அவ்வளவு ஹெல்த் கான்ஷியஸ்.கல்லூரில் என்.சி.சி ஆபீசர். லெப்டினென்ட் ராங்க் எல்லாம் அடைந்தவர்.




படத்தில் என் அண்ணன் திரு.சுப்பிரமணியன். இவருக்கு அடுத்த ஆண்டு சதாபிஷேகம். அருகில் மதினி திருமதி லோகா.





நான் எடுத்த படங்களை ஆல்பம் போட்டு மறுநாள் காலை கொடுத்தேன். எங்கள் கல்யாணத்தில் குட்டி போட்டோ எடுத்தான், சதாபிஷேகத்தில் நீ செய்து விட்டாய் என்றார் அண்ணன் ராமச்சந்திரன். எழுத உட்கார்ந்ததும் மலர்ந்த நினைவுகளால் பதிவிட நாட்களாகி விட்டன.