Thursday, February 28, 2008

எம்.ஆர்.ராதா தெரியும், எம்.கே.ராதா தெரியுமா?

மதராஸ் கந்தசாமி முதலியார் க்ரிஸ்டியன் காலேஜில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். கல்லூரி நாட்களிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களை ப்ரின்ஸிபல் மில்லருடைய மேற்பார்வையில் அழகாக ஆங்கிலத்தில் பேசி நடிப்பாராம். பின் தமிழ், ஆங்கில நாடகங்களை மேடைகளில் நடித்துப் புகழ் பெற்றார். நாடகம் எழுதுவதுலும், நடிப்பு சொல்லிக்கொடுத்து டைரக்ட் செய்வதிலும் வாத்தியார் என்று அழைக்கப் பட்டார்.
கந்தசாமி முதலியார் தன் ஒரே மகன் எம்.கே.ராதாவை தமிழ் நாடக மேடைக்கு அறிமுகம் செய்தார். தான் பார்க்கும் ஆங்கிலப் படங்களுக் கெல்லாம் ராதாவையும் அழைத்துச் சென்று மேடை நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கி பின் ராதா சினிமாவில் வரக் காரணமானார். ராதா நடித்த முதல் படம் எல்லிஸ் ஆர்,டங்கன் டைரக்ட் செய்த சதி "லீலாவதி". எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா கூட இந்தப்படத்தில் புதியவர்கள். முதலியார் பற்றி ஹிந்து நாளிதழில் 15/02/08 அன்று ராண்டார் கை எழுதிய கட்டுரையில் படித்தேன்.
பிறகு எம்.கே.ராதா ஜெமினி ஸ்டூடியோவில் சேர்ந்து பல படங்களில் நடித்தார். 'சந்திரலேகா', 'அபூர்வ சகோதரர்கள்' (இரட்டை வேடம்- கமல் நடித்தது இல்லீங்க), 'சம்சாரம்' எல்லாம் ஜெமினியின் முத்திரைப் படங்கள்
கத்திச் சண்டை-இப்போது ஆ, ஊ என்று கத்தி சண்டை போடுகிறார்களே அது இல்லை.-வாள் சண்டை. சந்திரலேகா டைட்டிலில் "ஃபென்ஸிங்"-ஸ்டண்ட் சோமு என்று வரும். ரஞ்சனுடன் சந்திரலேகாவிலும், நாகேந்திர ராவுடன் அ.சகோதரர்களிலும் ராதா போட்ட ஃபென்சிங் போல அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நான் பார்க்கவில்லை.ஆங்கிலப்படங்களில் எரால் ஃப்ளின் போட்டது போல.
சந்திரலேகா ரிலீஸ் க்கு முன் எங்கள் ஊர் கொட்டகையில் சிங்கிள் புரொஜெக்டர்தான். படம் 3 1/2 மணி நேரம் ஓடும்.அதனால் ட்புள் புரொஜெக்டர் வாங்கி விடுங்கள் என்று தயாரிப்பாளர், டைரக்டர் எஸ்.எஸ்.வாசன் சொன்னதால் டபுள் புரொஜெக்டர் வந்தது என்று என் அப்பா சொல்லக்கேட்டிருக்கிறேன். படங்களின் ஸ்டில் எதுவும் கைவசம் இல்லை. விரைவில் தேடி எடுத்து காட்டுகிறேன்.
அதன் பிறகு எம்.கே.ராதா, 'புதையல்', 'அம்பிகாபதி', 'வணங்காமுடி' என பல படங்களில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறார்.

சகாதேவன்

7 comments:

goma said...

சகாதேவன்
உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு எழுத்தும் என்னை அப்படியே கால எந்திரத்தில் ஏற்றி பின்னோக்கி ஓட வைக்கிறது.சந்திரலேகா,அபூர்வ சகோதரர்கள்...என்று வாசித்தாலே போதும் ஐந்து அண்ணன் நாலு அக்கா என்ற கூட்டத்துக்குள் என்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டு .வளைய வர வைத்து விடுகிறது.இளமைக் கால வாழ்க்கையை ஓட விட்டுப் பார்க்க வேண்டுமா?இன்றே வாருங்கள் வெடிவால் வலைப்பூ காண.

goma said...

தற்கால சினிமா,இசை ,விளையாட்டு என்று முன்னேற்றம் காணவேண்டும் என்ற ஆதங்கத்தில் அலசி எழுதும் உங்களுக்கு ,சக பிளாகர் சார்பில், "பிளாக் தந்த சுப்புடு" என்ற பட்டத்தை வழங்குகிறேன்.

goma said...

அந்த நாளில் ,நடிப்பு ,ஒரு கலை எனக் கொண்டாடப் பட்டு வந்திருக்கிறது .இன்று அது கொலை செய்யப்படுகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

சகாதேவன் said...

கோமா,
எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன். யாரையும் விமர்சிப்பதற்காக அல்ல. சுப்புடுவின் சங்கீத விமர்சனங்களை ரசித்துப் படித்திருக்கிறேன்.
சுப்புடு என்று எனக்குப் பட்டமா? நன்றி.
நடிப்பு கலையாக இருந்தது.
இப்போது கால மாற்றத்தால் தொழிலாக மட்டும் இருக்கிறது.
சகாதேவன்

Anonymous said...

பெட்ரோலை எதனால் கலக்க வேண்டும் என்கிறீர்கள்?

பெட்ரோலில் "Ethanal" ("எத்தனால்')
என்ற பொருளை கலக்க வேண்டும். இந்த எத்தனால் சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும்.
தங்களின் கேள்விக்கு நன்றி.

நானானி said...

சகாதேவன்!!
சமீபத்தில் சந்திரலேகா பார்த்தபோது..
சண்டைக் காட்சிகளின் காலவித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.
முதுகிலிருந்து அருவாவை உருவி ஒரே வீச்சு எதிராளியின் கழுத்தை நோக்கி விஷ்க்-ன்னு ஒரே வீச்சு. ஜோலி முடிந்தது.
ஆனால் எம்.கே.ராதாவும் ரஞ்சனும் என்ன அழகாக வாள் சண்டைக்குறிய விதிகள் மீறாமல் வலது கையில் வாளும் இடதுகையை முதுகுக்குப்பின் மடக்கியும் இட்ட சண்டையைப் பார்த்து இது கலையா அல்லது சண்டையா? என்ற பிரமிப்பே வந்தது.
நல்ல பதிவு! சகா!

சகாதேவன் said...

நன்றி நானானி,
சகாதேவன்