Saturday, August 2, 2008

கெட்டிக்காரன் யார்? ரோல் பிலிம் கேமராவா, டிஜிட்டல் கேமராவா?

பாக்ஸ் கேமரா, ஃபோல்டிங் கேமரா, ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், 35எம்.எம் கேமரா, ரேஞ்ச் ஃபைண்டர், எக்ஸ்போஷர் மீட்டர்,, சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், வைட் ஆங்கிள்/டெலிபோட்டோ லென்ஸ், ஜூம் லென்ஸ், இப்படி எல்லாம் புதுப் புது
கண்டுபிடிப்புகளுடன் கேமரா சென்ற நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.
என்றாலும் அன்று போட்டோ நன்றாக அமைந்தது "க்ளிக்" செய்த
கெட்டிக்காரர்களால்தான்.

அப்படி ஒரு கெட்டிக்காரர் என் பெரிய அண்ணன்.

காஸ்ட்லி ஹாபி என்று கருதப்பட்ட அந்நாளில் தன் ரோலில் ஒரு ஃப்ரேம் கூட வீணாகாமல் அழகான படங்களை தன் Rolleiflex f 2.8 கேமராவில் எடுப்பார். 35எம் எம் கேமராவில் 36 படம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது, அதற்காக படங்கள் எடுத்துத் தள்ளக் கூடாது என்றும் நெகட்டிவ் சின்னதானதால் என்லார்ஜ்மெண்ட் நன்றாக இராது என்பார். அதனால்
6cm*6cm ஸ்கொயர் நெகடிவ் தரும் 120 ரோல் தான் அவருக்குப் பிடிக்கும். ரோல் பிலிமில் இல்லாத மெகாபிக்ஸலா? தன் படங்களுக்கு பெரிய என்லார்ஜ்மெண்ட் போட்டு வாங்குவார்.

எங்கள் வீட்டு கல்யாணம், பிற விசேஷங்களில் எல்லாம் போட்டோ எடுத்து, ரோலை தானே டெவலப் செய்வார். ப்ரிண்ட்/என்லார்ஜ்மெண்ட் மட்டும்தான் ஸ்டூடியோவில்.
திருநெல்வேலியில் அன்று பிரபலமான ஸ்டூடியோ அதிபர்கள் எல்லோரும் அண்ணனிடம் கருத்துக் கேட்டு தங்கள் போட்டோகிராபர்களிடம் சொல்வார்கள். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் போட்டோ எடுக்க கற்றுத் கந்தார். எனக்கு அவர் முதலில் வாங்கித் தந்தது கோடக் ப்ரொளனி பாக்ஸ் கேமரா. 620 ரோலில் 6*9cm சைஸில் 8 படம் எடுக்கும்.

போட்டோகிராபியை தொழிலாக எண்ணியிருந்தால், தீரஜ் செளடா (பம்பாய்), சந்தாமியான் (மெட்ராஸ்) போல புகழ் பெற்றிருப்பார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 1960களில் நடந்ததே (வருஷம் நினைவில்லை,1961- 65 இருக்கலாம்) அப்போது கும்பாபிஷேக சிறப்பு மலரை கோவில் போட்டோக்களுடன் வெளியிட, குழுவின் தலைவர் திரு.பி.டி.ராஜனிடம், கோவில் நிர்வாகத்தில் இருந்த திரு.பழனி(எங்களூர்க்காரர்) அண்ணன் பற்றி அவரிடம் சொல்ல, பி.டி.ஆரின் அழைப்பின் பேரில், இரண்டு கேமராக்கள், ஃப்ளட் லைட், ஃப்ளாஷ், B&W/கலர் ரோல் பிலிம்களுடன் golfer உடன் செல்லும் caddie போல அண்ணனுடன் நானும் சென்றேன்.
அன்று அவர் எடுத்த படங்களில் என்னிடம் உள்ள சிலவற்றைப் பாருங்கள்.






அவருடைய கேமராக்கள்- 8எம் எம் மூவி கேமரா கூட உண்டு- நெகட்டிவ் ஆல்பம். போட்டோ ஆல்பம் எல்லாவற்றையும் அண்னன் மகன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

இன்று எத்தனை டிஜிட்டல் கேமராக்கள், எத்தனை மாடல்கள். அவை என்னவெல்லாம் செய்கின்றன? ஷட்டர் ஸ்பீட், அபெர்ச்சர் எல்லாம் செலக்ட் செய்கிறது, பட்டனை தள்ளினால் ஜூம் ஆகிறது. பிலிம் ஸ்பீட்(I S O)லைட்டைப் பார்த்து அதுவே எடுத்துக்கொள்கிறது. படத்தை நாம் உடனே பார்த்துக்கொள்ளலாம். ரோல் பிலிம் வாங்க வேண்டியதே இல்லை. பாட்டரி சார்ஜ் நிலையில் 300 படங்கள் எடுக்கலாம்.

அன்று குரூப் போட்டோ எடுக்க நேர்கோடாக seat போட்டால் ஒரங்களில் உள்ளவர்கள் முகம் ஃபோகஸ் ஆகாது என்று வில் (arc) வடிவில் seat போடுவார்கள். கேமராவை tripod-ல் மாட்டி, போட்டோகிராபர் தன் மேல் கருப்புதுணியை போர்த்திக்கொண்டு, க்ரவுண்ட் க்ளாஸில் ஃபோகஸ் செய்து, ப்ளேட் பிலிமை சொருகிவிட்டு, லென்ஸில் அபெர்ச்சர் செட் பண்ணி, ஸ்மைல் சொல்லி, கையால் லென்ஸ் cap-ஐ எடுத்து மூடிவிடுவார்(ஷட்டர் ஸ்பீட் லென்ஸில் கிடையாது). அந்த படங்கள் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறது?

புதிய டிஜிட்டல் கேமரா சில, முகங்களை தனித்தனியாக ஃபோகஸ் செய்து விடுமாம். யாராவது அசைந்தால் கூட ஷேக் இல்லாமல் படம் தருமாம். சிரிப்பதை பார்த்து தானே க்ளிக் செய்து விடுமாம். கம்போஸ் செய்வது மட்டும் தான் நம் வேலை.

அப்படியானால் இப்ப டிஜிட்டல் கேமராதானே கெட்டிக்காரன்?

அண்ணன் இருந்தால் இன்று எந்த டிஜிட்டல் கேமரா வாங்குவார் என்று எண்ணினேன். கூகிளில் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம். அவருக்கு பிடித்த ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ், ஸ்கொயார் ஃபார்மட் - ரோலீ பிரியர்களுக்காகவே செய்தது போல
rollei MINI DIGI உள்ளங்கை அளவில் இருக்கிறது. இதுதான் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.



இந்த மினிடிஜி, அண்ணனுக்கு என் சமர்ப்பணம்

Thursday, July 31, 2008

எதிலும் கையெழுத்திடும் முன் நன்றாக படித்துப் பாருங்கள்

திரு.கே.வைத்தியநாதன் ,தி.நகர், அப்போலோ டைம்ஸ் (1.8.08) நாளிதளில் எழுதியிருக்கிறார்.
சில வருஷங்களுக்கு முன்னால் லிப்டன் இந்தியா லிட். தங்கள் சேல்ஸ்மன் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு டீ தூள் சப்ளை செய்யாததால் அவர்கள் எல்லோரும் ப்ரூக் பாண்ட்க்கு மாறிவிட்டார்கள் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுதியதாம். இந்த வழக்கில் வைத்தியநாதனின் சகோதரர், திரு.கே. சிவராமகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரானாராம்.
குற்றச்சாட்டு: "சேல்ஸ்மன் பாண் ஷாப்களுக்கு டீ தூள் சப்ளை செய்யவில்லை. அதனால் அவர் தண்டிக்கப்பட வேண்டும்"
தன் வாதத்தில் வக்கீல், சேல்ஸ்மன் பாண் (PAWN)ஷாப்களுக்கு செல்லாததில் தவறே இல்லை. அவருடைய வேலை டீ தூள் தரவேண்டியது பான் (PAN)ஷாப்களுக்குத்தான், என்று கூறினாராம். பிறகென்ன. ஒரு எழுத்துப் பிழையால் சேல்ஸ்மன் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பானதாம்.

(நன்றி: அப்போலோ டைம்ஸ்- 1 ஆக.08 நாளிதழ்)

Tuesday, July 22, 2008

கல்லைப் பிளந்து சொத்தைப் பிரித்தாள்....

...பிளவுக்கல் இசக்கி அம்மன். ஒருவருக்கு தன்னுடைய மூன்று பிள்ளைகளூக்கும் சொத்து எப்படி பிரித்து தருவது என்பதில் சிக்கல். காரணம் அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு ஒரு மகனும் இளையவளுக்கு இரண்டு மகன்களும். மூத்தவள் சொத்தை பாதியாக பிரித்து தன் மகனுக்கு தர வேண்டும் என்றாளாம். இசக்கி அம்மனிடம் வேண்டிக்கொள்ள, அம்மன் அவர் கனவில் வந்து, கோவில் அருகே முழுதாக இருக்கும் பாறையை காலையில் சென்று பார் என்று சொன்னாளாம்.



பார்த்தால், பாறை 1/3 அளவிலும் 2/3 அளவிலும் பிளவு பட்டு இருந்தது. அம்மன் ஆணை படி பிள்ளைகளுக்கு தந்தாராம். பத்தமடைக்கு தெற்கே 10 கிமீ தொலைவில் உள்ள இந்த இசக்கி அம்மன் தான் எங்கள் குலதெய்வம். சின்ன வயதில் அப்பா, அம்மாவுடன் சென்றிருக்கிறேன்.
நேற்று ஆடிச் செவ்வாய். ரொம்ப நாட்களூக்குப் பிறகு நான், தாமரை(என் மனைவி), என் அண்ணன், மதினி எல்லோரும் சென்றோம். கோவிலில் முன் போல அடுப்பு கட்டிகளில்லாமல் அடுப்பே வைத்திருந்தார்கள்.

மதினிஅதிலும் அட்வான்ஸ். காஸ் ஸ்டவ் கொண்டு வந்திருந்தார்கள். சர்க்கரைப் பொங்கல் இட்டு, புது சேலை, மாலை எல்லாம் சமர்ப்பித்து வணங்கி வந்தோம்.

Wednesday, July 16, 2008

பண வீக்கம்

Inflation என்றால் கார் டயரின் டியூபில் காற்றடிக்கும் போது வீங்கி விடுமே அது போல பண வீக்கம் என்றால் 2ரூ, 5ரூ நாணயங்கள் பர்ஸில் போடமுடியாமல் வீங்கி(பெரிதாகி)விடுமோ என்று நினைத்தேன். நேற்று எங்கள் ரோட்டரி க்ளப்-ல் பேசிய, நெல்லையில் பிரபல ஆடிட்டர் சொன்னார்:

முன்பு நல்லெண்ணை தேங்காய் எண்ணையை விட விலை குறைவு. இன்று? காரணம் எள் கிடைப்பதில்லை. கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் இல்லை. பிழைப்பு தேடி, வேறு வேலைக்காக நகரங்களுக்கு போய் விட்டார்கள். அதனால் விவசாயமே குறைந்துவிட்டது. நகரிலும் எந்த வேலையென்றாலும் கூலி பயங்கரமாக உயர்ந்து விட்டது. கொத்தனார் வேலைக்கு தினக்கூலி இன்று 350ரூ (இலவசக்கொத்தனார் இந்த பதிவை படித்தால் என்னா சொல்வார்).

நகரங்களிலும் இளைஞர்கள் ஐ.டி படித்ததால் வெளிநாட்டுக்கும் மெட்ரோபாலிட்டன் சிடிக்கும் குடி பெயர்ந்துவிட்டார்கள். தனியாக வசிக்கும் பென்ஷனில் வாழும் பெற்றோர்கள் எந்த ரிப்பேர் வேலைக்கும் தங்கள் ஒரு மாத பென்ஷனையே கூலியாகத் தரவேண்டியுள்ளது.

அரசு எந்திரம் பழுதடைந்து கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆகும் செலவுக்காக தொழில் நிறுவனங்களையே நம்பியிருக்கின்றன. நாட்டில் பதுங்கி இருக்கும் கருப்புப் பணம் அப்போதுவெளிவருகிறது. பட்ஜெட்டும் அடுத்த தேர்தலை மனதில் கொண்டே தயாராகிறது.

சம்பளம் குறைய வேண்டுமென்று பெரிய நிறுவனங்கள் ஆள் குறைப்பு செய்து, கட்டிட பராமரிப்பு, சுத்தம் செய்தலுக்கெல்லாம் வருட காண்ட்ராக்ட் முறையில் ஒரு அமைப்புக்கு விட்டு விடுகிறார்கள். இதில் கிடைக்கக்கூடிய தொகையைப் பார்த்த அரசு, சர்வீஸ் டாக்ஸ் என்று கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது. அதை ரோடு போடும் காண்ட்ராக்ட்காரர்களிடமும் வசூலிக்க முனைகிறது. இதனால் 1 கோடி ரூ காண்ட்ராக்ட் எடுப்பவர் 36 லட்சம் வரை கட்டவேண்டும். அவர் போடும் ரோடு எப்படி இருக்கும்?

ரிலயன்ஸ் கச்சா எண்ணை இறக்குமதி செய்து, சுத்திகரித்து, பெட்ரோல்/டீஸல் ஏற்றுமதி செய்யத் துவங்கியது. உள்நாட்டிலும் விற்பனை செய்ய பல இடங்களில் பங்க் நிர்மாணித்தது. பாரத்/ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் பாதிக்கப் படுமோ என்று ரிலையன்ஸுக்கு புதிய windfall gain tax என்றதும் உள்நாட்டு வியாபாரத்தை ரிலையன்ஸ் நிறுத்தி விட்டது.

வீக்கம் இன்று 11.96 % என்கிறார்கள். நம் கையில் சிறிய வீக்கம் என்றால் எவ்வளவு அவஸ்தை படுகிறோம். பணவீக்கத்தை மக்கள் கண்டுகொள்கிற மாதிரியே தெரியவில்லை. செலவைக் குறைக்க வேண்டும், சேமிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. நான்வெஜிடேரியன் சாப்பிடுகிறவர் இனி நான், வெஜிடேரியன் என்று சொல்கிறாரா? பெட்ரோல் விற்பனை குறைந்ததா? வீட்டு வாடகை 50% கூடி விட்டது

ஒஹோ. இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று ஆடிட்டரின் பேச்சைக் கேட்டதும் புரிந்தது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு 8"*8" சதுரத்தில் 15" உயரம் கொண்ட டின்னில் நல்லெண்ணை செக்கிலிருந்து (பாங்க் செக் இல்லீங்க, செக்கு- இன்றைய இளைஞர்கள் செக்கை பார்த்திருப்பார்களா) வரும். சாப்பாட்டுக்கு, விளக்கேற்ற, எண்ணைக்குளியல் எல்லாம் அதில் இருந்துதான். இன்று சாப்பாட்டுக்கு மட்டுமே இதயம். விளக்கு ஏற்ற லூஸ் எண்ணைதான். எண்ணைக் குளியல் மறந்தேபோய்விட்டது.

politician எல்லாரும் statesmen ஆகி, அடுத்த தேர்தலை மட்டும் நினைக்காமல் அடுத்த தலைமுறையைக் கருதி திட்டமிட்டு, பட்ஜெட் போட்டால்தான் இந்த வீக்கம் குறையும்.

பாரத மாதாவை கடவுள் காப்பாராக.

Sunday, July 6, 2008

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்

4/7 வெள்ளியன்று தென்காசியில் ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்காக இரு நண்பர்களுடன் சென்றேன்.

மெல்லிசைக் குழு வல்லிசை முழங்கிகொண்டிருந்தார்கள். இசைக்குழுவினர் தங்கள் வால்யூம் லெவலை சபையின் அமைப்பு, விருந்தினர் எண்ணிக்கை என்று அநுசரித்து வைத்துக் கொண்டால் கேட்க நன்றாக இருக்கும், கல்யாண வீட்டில் உறவினர், நண்பர்களை பல நாட்களுக்குப் பிறகு சந்திப்போம். அவர்களுடன் பேசமுடிவதில்லை.

பாடிக்கொண்டிருந்த பெண் பாட்டுக் கேற்றபடி ஆட்டம் போட்டாள். கல்யாண வீட்டில் பாட என்று பாடல்களைத் தேர்வு செய்து ரிஹர்சல் பார்த்து வந்து பாடினால் கேட்க சுவையாக இருக்கும்.

குழுவின் லீடர் ஒரு கேள்வி கேட்டார், பதிலை சீட்டில் எழுதி தருமாறும் நிறைய சரியான பதில் இருந்தால் குலுக்கல் முறையில் பரிசு என்றும் சொன்னார்.

"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....." மலைக்கள்ளன் படத்தில் செளந்தரராஜன் பாடிய இப்பாட்டை எழுதியவர் யார்? இதுதான் கேள்வி.

படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் அது. மேடை ஏறி அந்த பாட்டை பாடவேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட தாளம்/வரி பிசகாமல் பாடியிருப்பேன். யார் எழுதியது என்று மறந்து விட்டேனே என்று வெட்கமாக இருந்தது.

வந்த சீட்டுக்கள் எல்லாமே--உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, கா.மு.ஷெரிப்----தவறான பதில் என்று சொல்லிவிட்டார்.
படத்தின் வசனகர்த்தா மு.கருணாநிதியே இந்தப் பாட்டெழுதினாரோ என நினைத்தேன்.
நாமக்கல் கவிஞரோ? கதை தானே அவருடையது?

நீங்கள் யாராவது சொல்லுங்களேன்

Friday, July 4, 2008

ப்ளெஷர் கார் ?

ரொம்ப வருஷத்திற்கு முன், 'அவர் ப்ளெஷரில் வந்தார்' (அதாவது காரில் வந்தார்) என்பார்கள். காரில் பயணிப்பதும் கார் ஓட்டுவதும் மிகுந்த ப்ளெஷராக(மகிழ்ச்சியாக) இருந்தது.

இன்று ஜனத்தொகைக்குப் போட்டியாக கார்த்தொகை பெருகிக்கொண்டே போகிறது. பன்னாட்டு கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவைத் தேடி வந்து கார் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள். அவர்கள் நாட்டை விட இங்கு லேபர் மலிவாக இருப்பதும் ஒரு காரணம்.

இருக்கும் அதே சாலையில் புதிது புதிதாக கார்கள், பஸ், லாரி, மோட்டார்பைக் எல்லாம் எதிரும் புதிருமாக கடும் வேகத்தில் செல்வதும், முந்த முயல்வதுமாக இருப்பதால் தினமும் விபத்துக்களும் உயிரிழப்புகளும் நேர்கின்றன.

நால்வழிச்சாலை போடுகிறோம் என்று அசோகர் அந்த நாளில் நட்ட சாலையோர மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி அகலப் படுத்தி விட்டாரகள். ஆனால் சாலைப் பணிகள் விரைந்து முடியவில்லை.

மதுரைக்கு நான் என் பியட் காரில் 80 கிலோமீட்டர் வேகம் தாண்டாமல் 2 மணி, 45 நிமிடங்களில் செல்வேன். இன்று இனோவாவில் 3 மணி 15 நிமி. ஆகிறது. இப்போதும் 80கிமீ தாண்டுவதில்லை. சாலையில் தார் வேலை முடியாததால் டயர் கெட்டுவிடக் கூடாதென்று பல இடங்களில் லோயர் கியரிலேயே செல்ல வேண்டி இருக்கிறது. முந்த முயலும் பஸ் கார் எல்லாவற்றிர்க்கும் வழி விடுவேன். ஆனால் எதிர் வரும் கார்கள் அசுர வேகத்தில் வலது புறமாக-நம் லேனில்-மற்ற வண்டிகளை முந்திக்கொண்டு வரும் போது நான் ஒதுங்கி நின்று வழி விடவேண்டும்.

நாலைந்து பேர் செல்லும் போது, காரில் எனக்கு எப்போதும் செளகரியமான சீட், ட்ரைவர் சீட்தான். ஆனால் கார் ஒட்டுவது இன்று ப்ளெஷராகவே இல்லை. விபத்துக்களை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 80கிமீ வேகத்திற்கு மேல் எந்த காரும் செல்லக்கூடாது.

ஹைவேயில் நடப்பது கார் ரேஸ் இல்லை. அதில் தோற்றால் எவ்வளவு பெரிய தண்டனை என்பதை எல்லோரும் உணர்ந்தால் தான் கார் ஓட்டுவதும் பயணிப்பதும் மீண்டும் ப்ளெஷ்ர் ஆகும்

Tuesday, June 24, 2008

தித்திப்பான பத்து விஷயங்கள்

வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதைக் கண்டுகொள்ளுங்கள். எக்ஸ்ட்ரா சர்க்கரை எடுத்துக்கொள்வதை தவிர்த்து விடுங்கள் என்று உலக டயபட்டீஸ் தினத்தன்று ஹார்லிக்ஸ் லைட் விளம்பரத்தில் பார்த்தேன். நவம்பர் 2006 (தேதி நினைவில்லை) செய்தித் தாளிலிருந்து வெட்டி பத்திரமாக வைத்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருக்கலாம், மறந்தும் இருக்கலாம்.

தித்திப்பான இந்த பத்து விஷயங்களை செய்து பாருங்களேன்.

1. ஒரு நாள் மாலை வேளையில் சந்தித்துப் பேச உங்கள் நண்பர்களை அழையுங்கள்.

2. உங்கள் அன்பு மனைவி/கணவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி போஸ்ட் செய்யுங்கள்.

3. "முத்து" திரைப்படத்தில் ரஜினியின் அமர்க்களமான நடிப்பை ரஸித்திடுங்கள்.

4. "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்"-என்றும் பசுமையான இது போன்ற பாடலை பாத்ரூமில் பாடுங்கள்

5.தெருமுனை கிரிக்கெட் மேட்ச்சில் அம்பயரிங் செய்யுங்கள்.

6. பழைய கல்லூரி போட்டோவைப் பார்த்து நினைவில் மூழ்குங்கள்.

7. பறவைகளுக்கு இரை போடுங்கள்.

8. தெருவோர ஏழைப் பிள்ளைகளுக்கு க்ரேயான் கலர்கள் கொடுங்கள்.

9. உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை பாராட்டி மகிழ்வியுங்கள்.

10. கொஞ்சமும் எதிர்பார்க்காத உங்கள் பழைய கால நண்பருக்கு போன் சேய்து பேசுங்கள்.

நான் என் நண்பர்/உறவினர் வீட்டிற்கு (டிவி சீரியல் தொடங்குமுன்) சென்று பேசி வருவேன்.
பழைய கல்லூரி குரூப் போட்டோக்களை எடுத்து நண்பர்களை நினைத்து மகிழ்வேன்.
எங்கள் வீட்டருகில் பூட்டியுள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மயில்கள் உள்ளன. அவை இரை தேடி எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வரும். தினமும் பேத்திகளுடன், மயில்களுக்கு பொட்டுக் கடலை தூவினால் கொத்தி சாப்பிட்டுச் செல்லும்.
குழந்தைகளுக்கு ஒரு படம் தந்து வர்ணம் தீட்டும் போட்டி நடத்தினேன். எல்லாருக்கும் ஒரு சிறிய க்ரேயான் பாக்ஸ் தந்தேன். பரிசு முதல் மூன்று பேருக்குத்தானே. க்ரேயான் பாக்ஸ் எல்லோருக்கும் பரிசு என்றதும் அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?

நீங்களும் செய்து பாருங்களேன். சம்பாத்தியம் , குடும்பம், டிவி, சினிமா எல்லாம் தாண்டி வாழ்க்கை எவ்வளவு தித்திப்பானது என்று பாருங்கள்.